ADS

AD

Monday, November 24, 2008

ஒழுக்கம்தான் கடவுள்!


தமிழ் மண்ணே வணக்கம்!

----------------------நடிகர் சிவகுமார்

யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
என மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் வகுக்கிறது திருமந்திரம்.

உன் பங்கில் கைப்பிடியையாவது உன் எதிரில் பசியோடு இருக்கிறவனுக்குப் பகிர்ந்து கொடு என்றனர் நம் முன்னோர். தருவதற்கு எதுவும் இல்லாத சூழ்நிலையிலும் மனதார ஒரு வாழ்த்தையாவது தந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினர் தமிழர். இந்த ஒழுக்கத்தைதான் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

ஒழுக்கமான வாழ்க்கைதான் சாதாரண ஆத்மாவை மகாத்மாவாக மாற்றியது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கம் ஒரு நாட்டின் தலைவிதியையே தீர்மானித்ததுதான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு. மதுவும், மாமிசமும் இல்லாமல் வாழவே முடியாது என்ற தட்பவெப்ப சூழல் உள்ள லண்டனிலும் காந்தியின் ஒழுக்கம் அவரை கண்ணிமாக வாழ வைத்தது. தான் இறக்கும்போது சட்டைப் பையில் வைத்திருந்த குறைவான சில்லறைகள்தான், தமிழகத்தின் முதல்வராக இருந்ததைவிடப் பலகோடி மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்கிற பெருமையைக் காமராஜருக்குப் பெற்றுத் தந்தது.

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் பொது வாழ்க்கையைப் பாதிக்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதும், ஆயுத உற்பத்தி பலமடங்கு அதிகரிப்பதும் மனித ஒழுக்கம் வழிதவறிப் போனதன் அடையாளம் அன்றி வேறென்ன?

விலங்கு வாழ்க்கையையும், மனித வாழ்க்கையையும் வேறுபடுத்திக் காட்டுகிற ஒழுக்கம் என்று சொல்லுக்கு நடை, முறைமை, நன்னடத்தை, உயர்ச்சி, உலகம், ஓம்பிய நெறி என்று பொருள் சொல்கிறது தமிழ்.
அக ஒழுக்கம் வந்துவிட்டால் புற ஒழுக்கம் தானாக வந்துவிடும்.உடலளவில் மட்டும் சுத்தமாக இருப்பதற்குப் பெயர் ஒழுக்கமல்ல. பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா... மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்தடா... என்கிற கண்ணதாசனின் வரிகளில் வருகிற மன ஒழுக்கம்தான் கடவுள். மிருகத்துக்கும் தெய்வத்துக்குமான இடைவெளியில் அடங்கியிருக்கிறது நம் வாழ்வு. மனம் சுத்தமாக இருந்தாலே உடலும் சுத்தமாக இருக்கும்.உடலையும் மனதையும் கெடுக்கக் கூடிய செயல்களைத் தவிர்ப்பது திடீரென ஒரு நாளில் வந்துவிடாது. அது பழக்கமாக மாற வேண்டும். பழக்கம் குணமாக மாறும். சித்திரமும் கைப் பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போலவே ஒழுக்கமும் ஒரு பழக்கமே!சிறு வயதிலிருந்தே அதை ஆரம்பிக்க வேண்டும்.

சின்ன வயதில் திருத்தப்படாத தீய ஒழுக்கம் வளர்ந்து குற்றமாக மாறுகிறது. தான் பெற்று வளர்த்த பிள்ளைகள் வளர்ந்த பிறகு தங்களைக் கவனிக்கவில்லை என்று புலம்புகிற பெற்றோர் பெரும்பாலும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை. திருடக்கூடாது என்கிற ஒழுக்கத்தின் பயனைப் புரியவைக்காமல், தின்பண்டங்களை எடுத்து ஒளித்துவைத்த வீடுகளில் நிச்சயம் ஒரு திருடன் வளர்கிறான்.வீடுகள், பள்ளிகள், கல்லுõரிகள் போன்றவற்றில் பயின்ற மனிதர்கள் வளர்ந்த பின்பு ஏன் ஒழுக்கமாக இருப்பதில்லை என்பதை நான் அடிக்கடி யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

எட்டு மணிப் பள்ளிக்கு உணவைக் கூட மறுத்துவிட்டு ஓடியவர்களள் வளர்ந்து பெரியவர்களானதும் முடிந்த அளவு வேலைக்குத் தாமதமாகப் போகிறார்களே ஏன்? ஒரு நாளைக்குப் பத்து மணி நேரத்துக்கும் மேல் படித்துக் கொண்டே இருந்த மாணவர்கள் படிப்பு முடிந்ததும் புத்தகம் இருக்கிற திசையைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் ஜாலியாக இருக்க விரும்புகிறார்களே! படிக்கும் போது ஆசிரியர்களின் ஒரு பார்வைக்கே விறைத்து நிற்கிற மாணவர்கள் பள்ளி, கல்லூரியை விட்டு வெளியில் போனதும், ஆசிரியர்கள் எதிரிலேயே சிகரெட் பற்றவைக்க எப்படி தைரியம் வருகிறது?

அப்பா வீட்டில் இருக்கிற நேரத்தில் ஒழுக்கமாக இருக்கிற மகன், ஸ்ட்ரைக் என்று பஸ் கண்ணாடியை கல்லெறிந்து உடைப்பது எப்படி? இதெல்லாம் ஒழுக்கத்தைப் பழக்கம் ஆக்காமல், பிள்ளைகளின் விருப்பம் ஆக்காமல் வற்புறுத்துவதால் நேர்கிற விபத்துகள்.வீடும், சமூகமும் ஒழுக்கத்தைத் திணிக்கக் கூடாது. பேச்சைப் போல மூச்சைப் போல ஒழுக்கமும் இயல்பான விஷயமாக்கப்படும்போதுதான் நிலையான பயனைத் தரும். அதற்கு போதனைகள் மட்டுமே பயன்படாது என்பது என் அனுபவம்.

நிச்சயமாக ஒழுக்கத்தை யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்க முடியாது. அது தானாகக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.எப்பவும் டி.வி. பார்த்துக்கிட்டே இருக்காதே. படி! என்று வீட்டில் தாய்மார்கள் கண்டித்தால், பிள்ளைகள் கேட்பார்களா? நாள் முழுவதும் டி.வி. முன் உட்கார்ந்திருக்கிற ஒரு தாயிடம் எதைக் கற்றுக்கொள்ள முடியுமோ அதைத்தான் குழந்தையும் கற்கும்.

ஜெயிலுக்குப் போவதற்கு அவமானப் படுகிறோமே தவிர, குற்றம் செய்ததை வசதியாக மறந்துவிடுகிறோம். அவமானம் சிறைக்குச் செல்வதில் இல்லை; ஒழுக்கம் தவறுவதில்தான் இருக்கிறது. லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகச் சிக்கியவர், அவமானத்தில் தற்கொலை என்பது செய்தி. எத்தனை முறை அவர் லஞ்சம் வாங்கி இருப்பார்.... தன் கடமையின் ஒழுங்கு மீறியது அவருக்கு அவமானமாகத் தெரியவே இல்லை. ஆனால் ஒழுக்கம் தவறிய, தனது செய்கை வெளியில் தெரிந்ததும் அவமானம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. லஞ்சம் வாங்குவதற்காக அவமானப்படாமல், மாட்டிக் கொண்டதை அவமானமாகக் கருதுகிற நமது மனோபாவம்தான் நமது முதல் எதிரி.ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையிலிருந்து விலகி இருப்பது அல்ல; கெட்ட செய்கையைச் செய்யாமல் இருப்பதுதான்! என்றார் பெர்னாட்ஷா.

பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது அவன் வெறும் படிப்பாளியாக வந்தால் போதுமென்று நினைக்கிறோம். ஸ்கவுட், என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற வாழ்க்கையின் புற ஒழுக்கங்களைக் கற்றுத் தருகிற அமைப்புகளில் தன் பிள்ளைகள் மறந்தும் சேர்ந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள். அந்த அமைப்புகளில் சேர்ந்து டிசிப்ளின் கற்றுக் கொள்கிற நேரத்தில் இரண்டு டியூஷன் சென்றால் அதிக மார்க் வாங்க முடியுமே என்று எண்ணுகிறார்கள். படிப்பு அறிவைத் தருமே தவிர ஒழுக்கத்தைத் தராது.கடவுளை நேசிப்பதே உண்மையான பக்தி. கடவுளுக்குப் பயப்படுவது அல்ல. அதே போல, ஒழுக்கமும் விருப்பம் சார்ந்தது. பயத்தால் ஒழுக்கம் வராது.

அப்படிப் பார்த்தால்

ஒழுக்கம்தான் கடவுள்!

 

 

 

No comments: