ADS

AD

Wednesday, February 18, 2015

ஜாதிகள் வேண்டும்


ஜாதியை எதிர்க்கும் பலரும் சொல்வது, ஜாதி என்றாலே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என பல தீய விசயங்களைத்தான். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். என் கேள்வி, எதில் தான் வேறுபாடு இல்லை? பிறப்பிலேயே ஆண் பெண் வேறுபாடு இருக்கிறது.. அதற்காக ஆண் பெண் இருவரையும் ஒழித்துவிட்டு ஒரே இனமாக கொண்டு வந்துவிடலாமா? சொத்தின் மூலமும் செல்வத்தின் மூலமும் வேறுபாடு இருக்கிறது.. அதனால் யாருமே சொத்து வைத்திருக்க கூடாது என சொல்லலாமா? என்ன தான் பேசினாலும் ஜாதியை ஒழித்துவிடவும் முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜாதியை ஒழிக்க வேண்டும் என பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் ஜாதி வெறியை இன்னும் தான் அதிகரிக்கும்.

இங்கு பகுத்தறிவாளர்கள் பலரும் சொல்வது என்ன? ஜாதி மனிதனை பிரிக்கிறது என்கிறார்கள். என் நண்பர் குழுவில் பலரும் என் ஜாதியோ என் மதமோ கிடையாது. ஆனாலும் இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வருவது அவர்கள் தான். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். நட்புக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாது. என் வேற்றுமத & வேற்று ஜாதி நண்பர்களின் அம்மா, அப்பா, சகோதரி எல்லோரையும் நானும் அம்மா, அப்பா, தங்கச்சி என்று தான் சொல்கிறேன். அவர்களும் அப்படியே. பின் எப்படி ஜாதிகளுக்குள் ஒற்றுமை  இல்லை என இவர்கள் சொல்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை ஒற்றுமை என்பது, இன்னொரு ஜாதியில் திருமண பந்தம் கொண்டிருப்பது தான் போல.. நீங்கள் வேறு ஜாதிக்காரரோடு வித்தியாசம் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தால் மட்டும் பகுத்தறிவுக்கு போதாது. உங்கள் வீட்டு பிள்ளைகளையும் அவர்களுக்கு கட்டி வைத்தால் தான் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதாக இந்த பகுத்தறிவு செம்மல்கள் ஒத்துக்கொள்வார்கள். பகுத்தறிவு என்பதே திருமணத்தை மறுக்கிறது.. ஆனால் அதே பகுத்தறிவு தான், திருமணத்தின் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும் என்கிறது. என்ன ஒரு விந்தை இது?

என் வீட்டிற்கு என்று என் குடும்பத்திற்கு என்று சில பழக்க வழக்கங்கள் இருக்கும். எங்கள் குடும்பங்களில் பெண் ஊரில் தான் திருமணம் நடக்கும். பெண் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். சில ஜாதிகளில் மாப்பிள்ளை வீட்டில் தான் இந்த சடங்குகள் எல்லாம் நடக்கும். ஒரு சில ஜாதிகளில் மணமக்களின் பெற்றோர் மேடையில் அமர்ந்து மாற்றி மாற்றி மரியாதை செய்துகொள்வர். சில சமூகங்களில் மணமக்களின் தாய்மாமன்கள் இதை செய்வர். மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்து கொண்டு தாலி கட்டும் ஜாதியும் இருக்கின்றன, மாப்பிள்ளைக்கு மிஞ்சி (மெட்டி) போடும் ஜாதியும் இருக்கின்றன. சிலர் மஞ்சள் கயிரில் தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மூன்று முடிச்சு போடுவார்கள். சில ஜாதிகளில் தங்க சங்கிலியில் தாலியை கோர்த்து, அதை கட்டாமல் அணிவிப்பார்கள். சில இல்ல திருமணங்களில் கெடாய் விருந்து இருக்கும். வேறு சில ஜாதி திருமணங்களில் சைவம் மட்டுமே பிராதானம். அதுவும் நகரத்தார் வீட்டு கல்யாணங்களில் நுங்கில் பாயாசம், இளநீரில் மோர் என நாம் கற்பனையே செய்து பார்த்திராத ரகங்களில் 16 வகை 18 வகை என பதார்த்தங்கள் இருக்கும். பிராமணர் வீட்டு திருமணங்கள் அவர்களுக்குரிய நலங்கு, ஜானவாசம் என 6, 7 விசேசங்களோடு நடக்கும். எங்கள் குடும்ப கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பின் போது பெண் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்பது அவ்வளவு அழகு. 101, 501 என ஆரத்தியிலேயே மாப்பிள்ளையை மயக்கம் அடையச்செய்யும் ஆட்கள் எல்லாம் உண்டு. இதையெல்லாம் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இரு வீட்டினரும் மிகுந்த சந்தோசத்தோடு பகை, கவலை, வஞ்சகம் என அனைத்தையும் மறந்து தங்கள் இல்ல திருமணத்திற்காக மாய்ந்து செய்வது இதெல்லாம்.

கலப்பு திருமணத்தில் இதெல்லாம் நடக்குமா? நடக்கும் என்று ஒரு பேச்சுக்கு கூட ஒத்துக்கொள்ள முடியாது.. சரி, கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் இரு வீட்டு சடங்குகளையும் செய்யலாமே என்றால் அதுவும் சரி வராது. ஒத்த கருத்துள்ள, ஒரே மாதிரியான சடங்குகள் கொண்ட இரு குடும்பங்கள் திருமணம் செய்யும் போதே எவ்வளவு களேபரங்கள்? இதில் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் என்றால் மனஸ்தாபம் தான் மிஞ்சும். அப்படி மனஸ்தாபம் இல்லாமல் எல்லாம் சுபமாய் முடிந்தாலும், இரண்டு சடங்குகளும் கலந்து, திரிந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்று ஆகிவிடும். இந்து கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஜாதியிலும் ஒவ்வொரு வரைமுறை செயல்முறை இருக்கிறது. கலப்பு திருமணம் மூலம் அந்த வரைமுறையும் செயல்முறையும் போய் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்னும் புள்ளியில் வந்து நிற்கும். வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்றால், எதற்கு காலம் காலமாக இவ்வளவு உறவினர்களும் கொண்டாட்டங்களும், மகிழ்ச்சிகளும்? உறவினர்கள் நம் கல்யாண செலவை பகிர்ந்து கொள்ள, கொண்டாட்டங்கள் உறவை இன்னும் பலமாக்க, இப்படி ஒற்றுமையாக அனைவரும் கூடும் போது வரும் மகிழ்ச்சி தான் உண்மையான சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கொடுக்கும்.

திருமணத்தில் மட்டும் அல்ல. குல தெய்வ வழிபாட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. சிலர் ஆடு வெட்டுவார்கள், சில குல தெய்வம் சைவமாய் இருக்கும். சில குல தெய்வங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு பொதுவானவையாய் இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாவற்றையும் கலைந்து ”நான் ஒரு மனிதன், மனிதாபிமானி” என எல்லோராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒருவன் அப்படி வாழ நினைத்தால் அவனை இத்தனை வருடம் ஆளாக்கி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது சங்கடத்தை கொடுக்கலாம். அவன் ஒருவனின் புரட்சிக்காக அவர்களை ஏன் அவன் சங்கடப்படுத்த வேண்டும்? பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் ஜாதி வேறுபாடு பார்க்காமல் வளர்வதில் என்ன வந்துவிடப்போகிறது? தனி மனிதனாக, ‘இது என் பெர்சனல் யாரும் இதில் தலையிடாதீர்கள்’ என எல்லோரும் வாழ ஆரம்பித்தால் யாருக்குள்ளும் ஒற்றுமை இருக்காது. ஜாதி என்பது ஒரு சிறு குழுவாக மக்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுவும் இல்லை என்றால் மக்கள் இன்னும் அதிகமாக அடித்துகொண்டு தான் இருப்பார்கள்.

அதே போல் நம் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் இருக்கிறது. அது நமது பாரம்பரியம். உலக நாடுகள் இந்தியர்களையும் இந்திய கலாச்சாரத்தையும் உயர்ந்தது என இது போன்ற நமது பழக்க வழக்கங்களை வைத்து தான் சொல்கிறது. அந்த அடையாளங்களை எல்லாம் இழந்து நாம் வெறும் புரட்சி மட்டும் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.


உலகில் இருக்கும் எல்லோருக்கும் தான் சார்ந்த தன் இனம்/மதம்/குலம் சார்ந்த பெருமை இருக்கத்தான் செய்யும். தமிழன் என்றால் சிலருக்கு சிலிர்க்கும், யாராவது கிறிஸ்தவ பாடல் பாடுவதை கேட்டாலே சிலருக்கு கண்ணீர் வரும், ரோட்டில் திருமண ஊர்வலம் செல்லும் கூட்டத்தை பார்த்தால் தன் சொந்த பந்த ஞாபகம் வரும் சிலருக்கு. இப்படி ஒவ்வொருவருக்கும் தன் ஜாதி, மொழி, மதம் சார்ந்த அபிமானம் இருக்கத்தான் செய்யும், ஒரு நாத்திகனுக்கு இன்னொரு நாத்திகன் மேல் அபிமானம் இருபப்தைப்போல. அதனால் கலப்புத்திருமணம் மட்டுமே ஜாதி ஒழிப்புக்கான வழி அல்ல. மக்களுக்குள் ஒற்றுமை இருந்தாலே போதும். அந்த ஒற்றுமை என்பதை நம் குடும்பத்திற்குள் இருந்து ஆரம்பிப்போம். நம் பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்காமல் பழைமையை மறக்காமல் வாழ்வோம். ஜாதி, மதம் என்பதை நம் வீட்டு வாசல் வரை மட்டும் வைத்திருப்போம். முன்பே சொன்னது போல் ஜாதி என்பது சிறு குழுக்களுக்குள் ஒற்றுமையாக வாழ படைக்கப்பட்டவை. அந்த சிறு குழுக்கள் தன்னை போன்ற இன்னொரு சிறு குழுவின் மீது ஏற்றத்தாழ்வு பார்க்காமல், அதே நேரத்தில் தன் பழக்க வழக்கத்தையும் விடாமல் நட்போடு பழக ஆரம்பித்தாலே போதும், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். நாமும் நம் சுற்றமும் பிள்ளைகளும் ஜாதி மத இன வேறுபாடு இல்லாமல் பழகுவோம்.. ஜாதிகள் வேண்டும் நம் பழக்க வழக்கங்கள் நம்மை விட்டுப்போகாமல் இருக்க...

thanks to: Rams Blog - http://www.sivakasikaran.com

Sunday, January 18, 2015

சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?

நம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது 'சொந்த பந்தத்துல நல்ல வரன் இருந்தா நம்ம புள்ளைக்கு பாத்திரலாம்' என்பது தான்.

சொந்தத்தில் திருமண பந்தத்தை  பெரியோர்கள் நிச்சயிக்க விருப்புவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சம்பந்திகள் சொந்தங்களாக இருப்பதால் உரிமையுடன் பழகமுடியும். சங்கோசமில்லாமல் புழங்க முடியும். மேலும் இரு குடும்பத்தினர் ஒருவரின் நிறை குறைகளை மற்றவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டே உறவாடுவதால், பின்னாட்களில் தம்பதிகளுக்குள்ளோ அல்லது அந்தக் குடும்பத்தினருக்கிடையிலோ உண்டாகும் பிரச்சனைகளின் தன்மை உணர்ந்து அதற்கேற்றபடி அவர்களுக்கு உதவுவதற்கும் அல்லது குறைந்த பட்சம் பிரச்சனைகளைத் பேசித் தீர்க்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.

பழைய கால பாசப்பரிமாற்ற நினைவுகளே பல நேரங்களில் பிரச்சனைகளைத் தீர்க்க உதவிவிடும்.

இப்படி பல நெகிழ் தன்மைகள் இரு வீட்டாருக்கும் இடையில் இருப்பதால் நல்ல நாள் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று உறவுகள் மகிழ்ந்து வாழ, வருடங்கள் கடப்பது தெரியாமல் வாழ்க்கை ஓடிவிடும். மேலும் திருமணம் முடித்துக் கொள்ளும் தம்பதிகள் இளம் பருவத்தில் அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களது இளமைக்கால நினைவுகள் அவர்களின் வாழ்க்கையில் நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒரே மாதிரியான குழந்தைப் பிராயத்து நினைவலைகள் அவர்களின் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாசத்தையும், உரிமையையும் நெருக்கமாக வெளிப்படுத்திக் கொள்வர். பிறக்கும் குழந்தைகள் மீது அப்படியே அந்த பாசம் பிசகின்றி செலுத்தப்படும்.

இப்படி பல்வேறு நன்மைகள் இருப்பினும், திடீரென மருத்துவ ரீதியாக எனக்கூறி ஒரு பெரிய புரட்டு இடைக்காலத்தில் பரப்பப்பட்டது. அது நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறந்து விடும் என்பதாகும். அதெப்படி? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தாலே பிறக்கும் குழந்தை எல்லாம் ஊனமாகத் தான் பிறந்து விடுமா என்ன? ஏன் இந்த பித்தலாட்டப் பொய் பரப்பப் பட்டது?

இந்தக் கூற்றை புரட்டு, பித்தலாட்டம் என்று கூறலாமா என உங்களுக்குச் சந்தேகம் வருகிறது. சந்தேகமே வேண்டாம், அது வெறும் புரட்டு தான். பித்தலாட்டம் தான். காரணம் ஒரு கிராமத்திற்குச் சென்று பார்த்தால் அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரக்காரர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் மாமன், மச்சான், சகலை, பங்காளி என சொந்தக்காரனாக மட்டும் தான் இருப்பார்கள். அனைவருமே முறைப் பெண், ஒன்றுவிட்ட அத்தைப் பெண், சின்ன மாமன் மகன் என்று ஏதாவது ஒரு உறவில் மணமுடித்து அப்படியே உறவுக்குள்ளேயே திருமணங்கள் செய்து கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். அப்படி இருப்பதால் மட்டுமே ஒரு கிராமத்திற்குள் இருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் யாவரும் சொந்தபந்தங்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டாகிறது.

அப்படி ஒரு கிராமமே சொந்தத்தில் திருமணம் செய்து பங்காளிகளாக வாழும்போது அவர்கள் அத்தனை பேருமே ஊனமுற்றவர்களாகவும் நோயாளிகளாகவுமே தான் இருக்கிறார்களா என்ன? இந்த புரட்டின் படி நடக்குமானால் ஒரு கிராமமே ஊனமுற்றவர்களாலும், கொடிய வியாதிக்காரர்களை மட்டுமே கொண்ட கிராமங்களாகத்தானே நம் நாட்டு கிராமங்கள் எல்லாம் இருந்திருக்க முடியும்.

இப்படி விரிவாக எடுத்துக் கூறி கேள்வி கேட்டால் இந்த புரட்டைப் பரப்புபவர்கள் உடனே ஒரு அடிக்கும் ஜல்லி, 'நாங்கள் ஊனமாகத்தான் பிறக்கும் என்று சொல்லிவிடவில்லை. 'நெருங்கிய உறவினர்களுக்குள் சம்பந்தம் செய்தால் ஒரு சில நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று தான் கூறுகிறோம்'. என்பார்கள்.

இந்தியாவில் இருக்கும் ஜாதி முறையே உறவு முறையிலான மனிதக்குழுக்களின் தொகுப்புதான். அப்படி இருக்கையில் இது போன்ற முடிவுகளை வெளியிடுபவர்கள் எந்த விதத்தில் இந்த சாத்தியக் கூறுகளை ஆராய்ச்சி செய்தார்கள்? எத்தனை நெருங்கிய உறவுத் திருமணத்தை ஆராய்ந்தார்கள்?. இதனை முதன் முதலில் வெளியிட்டவர் யார்? இது போன்ற ஆராய்ச்சியை நடத்தியவர்கள் யார்?

இதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு பெரிய விளம்பரங்கள் ஏதாவது ஒரு அமைப்பினர் மூலம் பரப்பப்படும். அது பெரிய அளவில் பேசப்படும். அவற்றை அப்படியே ஊடகங்கள் செய்திகளாக்கிவிடும். அவ்வளவு தான். நம் மக்கள் உடனே அது தான் சரி என்றும் முடிவு கட்டி விடுவார்கள்.

நாம் தான் படித்த நாகரீக சமுதாயமாயிற்றே. ஏற்கனவே 'சொந்தக்காரர்களை விட ப்ரென்ட்ஸ் தாம்ப்பா எனக்கு எல்லாம்' என்று சொந்தங்களை வெறுப்பதை ஒரு நாகரீகப் பேச்சாகவே கொண்டிருக்கும் நம் புதிய தலைமுறை வர்கத்தினர் இது தான் சாக்கென்று 'சொந்தத்தில் பெண்ணெடுக்கப் போவதில்லை, என் பெண்ணைக் கொடுக்கப் போவதில்லை. குழந்தை
ஊனமாகப் பிறக்குமாமே!' என்று கூறி உறவுக்குள் திருமனத்தை உடைத்தெரிந்து மகிழ்வார்கள்.

ஆனால் இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியோ உண்மைத் தன்மையைப் பற்றியோ, இதை ஆராய்ந்து ஏதோ ஆராய்ச்சி முடிவுகளைப் போல இதைப் பரப்புபவர்கள் யார் என்பது பற்றியோ எந்த சிந்தனையும் உதிக்காது.

உதாரணமாக இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறாது எனக் கொள்வோம். ஒருவர் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் பெண் பார்க்கச் செல்கிறார், பெண்ணின் தந்தைக்கு உடல் முழுவதும் ரோமம் வெள்ளைப் படுதலால் பாதிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் பெண் மிகவும் அழகாக எந்த உடல் குறைபாடும் இல்லாமல் இருக்கிறார். அந்த வீட்டில் பெண் எடுப்பார்களா? பின்னங்கால் பிடறியில் இடிபட ஓட்டம் பிடிப்பார்கள். எவ்வளவு வரதட்சினை கொடுத்தாலும், ஐயா சொத்தையே எழுதித் தருகிறேன் என்றாலும் 'நாம ஏன் ரிஸ்க் எடுக்கனும்?' என்று காணாமல் போய் விடுவார்கள்.

ஏன் இந்த ஓட்டம்? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் தானே பரம்பரை நோயோ அல்லது தாத்தா பாட்டிகளின் நோயோ பேரன்களுக்கு வரும்? அந்நியத்தில் தானே பெண் பார்த்தோம். பெண்ணின் தந்தைக்கு இருக்கும் சருமப் பிரச்சனை 'அந்நியப்' பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைக்கு எப்படி வரும்?

அந்நியத்தில் பார்க்கும் ஒரு ஆண்மகனுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நெருங்கிய சொந்தமல்லாத அவனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை அதே சர்க்கரை வியாதியுடன் பிறக்காது என்று உறுதியாக நம்பி சர்க்கரை வியாதி உள்ள ஒரு ஆணை எந்த பெண் வீட்டிலாவது தனது மகளுக்கு மணம் முடிப்பரோ? அப்பொழுதும் 'எஸ்கேப்' தான்.

ஒரு வீட்டினரின் பெரியவர்களுக்கு இருக்கும் ஏதாவது நோய் அவர்கள் வீட்டுச் சந்ததியினருக்கு மரபணு வியாதியாக தொடர வாய்ப்பிருக்கிறது என்பது ஒரு பொதுவான கருத்து. அது சொந்தமானாலும் அந்நியமானாலும் அப்படியே. ஆனால் சொந்தத்தில் திருமணம் செய்தால் மட்டும் தான் மரபுப்படியான நோய் அடுத்த சந்ததியினருக்கு வரும் என்பது போல செய்தி பரப்புகின்றனர்.

ஆனால் ஏன் இந்த புரட்டு பரப்பப் பட வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்? இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு விதமான இறுக்கமான உறவு முறைகள் நிலவுகின்றன. உறவுமுறைத் திருமணங்கள் பெருகி சந்ததினர் ஒரு குழுவினராக அறியப்பட்டு பின்னர் அதுவே ஒரு குறிப்பிட்ட இனக்குழுவாக பின்னாலில் பெரிய ஜாதியாகவும் வளர்ந்து விடுகிறது.

தற்காலத்தில் ஜாதிகளாக இருப்பவைகளில் பல அதற்கு முன்னதாக ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்ட குழுவாக இருந்திருக்கும். அவைகள் எல்லாமே உறவுகளுக்குள்ளேயே உறவுகளை வளர்த்து சந்ததிகளைப் பெருக்கிக் கொண்ட இனக்குழுக்களாகவே இருந்திருப்பர்.

அப்படித்தான் கிராமங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே சொந்தங்களைக் கொண்ட பங்காளிகளாகவே இருப்பதைப் பார்க்கிறோம். உறவுமுறைக்காரர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆக ஒரு ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் உறவுக்காரர்களாகத் தான் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. இவ்வகையில் தான் ஒரே ஜாதியினர் ஒருவரை ஒருவர் உள்ளுணர்வு உந்த ஆதரித்துக் கொள்வதும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

இந்த ஜாதீய குழு உணர்வை உடைக்க முயற்சிப்பவர்களில் அதனால் ஆதாயம் தேடுபவர்களில் முக்கியமானவர்கள் மதமாற்றிகளே! காரணம் ஒரு குறிப்பிட்ட மனிதனை இறுக்கமாக பிணைக்கப்பட்ட அவன் ஜாதியில் இருந்து பிரிப்பது மதமாற்றிகளுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை.

மதம் மாற்றிகளின் முக்கியமான வேலை ஒருவரை மதம் மாற்றும் போது, அவனிடமிருந்து பழைய மதத்தில் இருந்த கலாச்சார சம்பிரதாயங்களையெல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்து
விடுதல் தான்.

அவ்வாறு ஒருவர் ஒரு ஜாதியிலிருந்து வெளியேற்றப்படும் போது அவர் பல தலைமுறைகளாக செய்து வந்த ஜாதீய சடங்குகளை அடுத்து வரும் நாட்களில் செய்ய முடியாமல் போய் விடுகிறது.
அது வாழ்நாள் முழுவதும் ஒரு இழப்பாகவே ஆகிவிடுகிறது.

குடும்பத்தின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரவர் ஜாதியின் வழக்கப்படி சடங்குள் இருக்கின்றன. உதாரணமாக பெண் வயதிற்கு வந்தால் அதற்கு ஒரு சடங்கு, பிறப்போ இறப்போ அவற்றிர்கு ஒரு சடங்கு, திருமணம் வளைகாப்பு என்றால் அதற்கு ஒரு சடங்கு என்று குடும்பத்தின் எந்த ஒரு முக்கிய நிகழ்வானாலும் ஜாதியின் அடிப்படையிலான சடங்கிற்கு உட்பட்டே அதனை கொண்டாட வேண்டிவருகிறது. அவரோடு சேர்ந்து வீட்டின் முக்கிய நிகழ்ச்சிகளை கொண்டாட வரும் உறவுக்காரர்கள் ஜாதிய சடங்கின்படி நடக்கவில்லையென்றால் அவர்கள் அதனை ஒரு விஷேஷமாகவே கருதாமல் ஒதுங்கிவிடுவர்.

ஆக ஒருவர் தனது ஜாதிக்கட்டுக்குள்ளிருந்து வெளியேறுவது தனது மொத்த சமூகத்தின் ஆனிவேரை இழந்து விடுதலுக்குச் சமமாகிறது. உறவுகளை முழுமையாக இழக்க நேரிடுகிறது.
இதற்கெல்லாம் பயப்படுவோரும், உறவுகளையும், சொந்தங்களையும், பல தலைமுறைகளாக கட்டிக்காத்து வந்த நடைமுறைச் சம்பிரதாயங்களையும் இழக்க விரும்பாதவர்கள் வேற்று மதம் பற்றிய யோசனைக்கே வருவதில்லை.

இந்த உறவுகளுக்குள்ளான நெருக்கமான சங்கிலிப் பிணைப்பு மத மாற்றிகளுக்கு பெரிய உபத்திரவமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனையும் மதம் மாற்ற அதீத பிரயத்தனம்
செய்ய வேண்டி வருகிறது. அதில் களைத்துப் போய் விடுகிறார்கள். ஆக இந்த நெருக்கமான உறவுகளை உடைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஒரு நெகிழ் தன்மை கிடைக்கும். அந்த உறவுகள் எல்லாம் திருமண பந்தத்தின் மூலமாகத்தான் உண்டாகின்றன. எனவே சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று கதை கட்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளின் நெருக்கங்கள் அந்நியப்பட்டு, பிறகு அப்படியே ஜாதிய அடிப்படையின் ஆணி வேரை அசைத்து விடலாம், தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயங்களை அழித்து விடலாம் என்கிற நோக்கத்தில் பரப்பப்படுகிறது.

எனக்குத் தெரிந்த மனிதர்களுள் சொந்த அத்தை மகளை, மாமன் மகனை, ஏன் தாய் மாமனை திருமணம் செய்து கொண்ட பலரும் மிகவும் ஆரொக்கியமான குழந்தைகளைப் பெற்று சுபிட்ஷமாக இருப்பதைப் இந்தக் காலத்திலும் பார்க்க முடிகிறது. அந்நியத்தில் திருமணம் செய்தவர்களுக்குக் கூட சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வரும் பிள்ளைகள் பிறப்பதும் உண்டு. பிறந்து சில வருடங்களே ஆன குழந்தைக்கு கேன்சர் வந்து இறந்த செய்திகளும் உண்டு. அவர்கள் அந்நியத்தில் திருமணம் செய்தவர்களாகவே இருந்தனர்.

மரபணு பற்றி அராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், குழந்தை கருவிலே உருவாகும் போதே அது ஆண், பெண் என தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்துமே பதிவு செய்யப்பட்டு விடும்.

அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும் என்று கூறுகிறார்கள். ஆக மரபணுவில் யாருடைய மரபணுவில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்து தெரிந்துகொள்ள முடியாது என்பது தான் நிதர்சனம். அப்படி இருக்கையில் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் திருமணம் செய்பவர்களுக்கு, எந்த நோய் நொடியுமே அண்டாத குழந்தைதான் பிறக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதை யார் கொடுக்கப்போகிறாகள்?

மேலும் ஒருவருக்கு நோய் உண்டாவதற்கு வெறும் மரபணு ரீதியான காரணங்கள் மட்டுமே இருந்துவிடப்போவதில்லை என்பதும் நிதர்சனம்.

ஆக எல்லோருக்கும் மரபணு உண்டு, சொந்தத்திலோ அந்நியத்திலோ, எங்கே யாருடன் திருமணம் செய்தாலும் பிறக்கப் போகும் குழந்தையின் நலன் என்பது மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது உறுதி. 'நாங்கள் கூறும் வகையில் நீங்கள் திருமணம் செய்தால் தான் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்' என்று கூற யாருக்கும் தகுதி இல்லை.

எனவே நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்பது சுத்தப் பித்தலாட்டம் என்று அறிக. உங்கள் பிள்ளைக்குப் பெண்ணோ, பெண்ணிற்கு பிள்ளையோ உறவுகளில் இருந்தால், அவர்களுடன் திருமண பந்தத்தை பயமின்றி உறுதி செய்து உறவுகள் சிதறாமல் அள்ளிக்கொள்க. புதிய சிந்தனை, கண்டுபிடிப்பு என்றெல்லாம் பெயர் சொல்லி நமது பாரம்பரிய குடும்ப கலாச்சாரத்தை உடைக்கப் பார்க்கும் குப்பைகளை அள்ளி குப்பைத்தொட்டியில் இடுக.

உண்மைகளை உணருங்கள். உறவுகளைப் பேணுங்கள்.

Thanks to http://hayyram.blogspot.in/

மீண்டும்....

கடந்த இரண்டு வருடங்களாக எதுவும் பதிய முடியவில்லை.. மகளின் திருமணம்.... பேரனின் வருகை... இவை முக்கிய காரணங்கள்... இனி நேரம் கிடைக்கும்போது தொடரலாம் என்றுள்ளேன்...



Saturday, January 5, 2013

கோவையிடம் சென்னை கேட்டது நீ செளக்கியமா


ஐவகை நிலங்களை அந்நாளில் அறிந்தோம்
ஆறாம் நிலத்தினை இந்நாளில் அறிந்தோம் 
கோவை - இருளும் இருள் சார்ந்த நிலமும் 

நாத்திகன் கூட இங்கு ஆத்திகனாகிறான்
மின்சாரம் எப்போது வரும் என்று ஆதங்கப்படுகிறான் 

"கைத்தான்" விசிறியினை காலமெல்லாம் கொண்டவனும்
கை தான் விசிறியெனும் கொள்கைக்கு மாறுகிறான்
கோவையில் பிறக்கும் குழந்தைகள் பலவும் இப்போது அழுவதில்லையாம்
கருவறைக்கும் கோவைக்கும் வேற்றுமையில்லாத‌தால் 

மாலைப்பொழுது சாயும்போது மின்விளக்குகள் அணையும்போதுபெண்குலத்தின் கழுத்தில் உள்ள பொன்மாலையைஅறுத்துச் செல்லும் களவுகளால்தான்,
அந்தப்பொழுதிற்கு பொன்மாலைப்பொழுது என வந்ததோ? 

இன்றிருந்தால் பாரதி இப்படி பாடியிருப்பான்..
"யாமறிந்த நகர்களிலே கோவையைப்போல இருளானதெங்கும் காணோம்" 

வள்ளுவனின் வாக்கும் வந்திருக்கும் இப்படி
"சென்னையிலே வாழ்வாரே வாழ்வார் மற்று
எல்லோரும் இருளிலே ஆழ்ந்துழல்வார்" 

கண்ணதாசனும் இப்படி கவிதை புனைந்திருப்பான்
"கோவையிடம் சென்னை கேட்டது நீ செளக்கியமா"
"யாரும் உன்னிடத்தால் இருந்தால் செளக்கியமே" 
கோவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

 இரவு நேரங்களில் மின்சாரம் வருவதில்லை
இசைமுழக்கத்தோடு வரும் கொசுக்களின் ஊர்வலம். 

கொசுக்களை விரட்ட "ஆல் அவுட்டை" நாடினால்
அதுவேலை செய்வதில்லை 
மின்சாரம் இன்மையால் கோவையில் இன்று 
சிறுதொழில் அனைத்தும் "ஆல் அவுட்"
உழைப்பால் உயர்ந்த நகரம் இன்று பிழைக்க கேள்விக்குறியானது. 
ஒரு தொழில் நகரம் இன்று இருள் நகராயிற்று
துயர் நகராயிற்று

Thanks to:EED (Equitable Electricity Distribution) CBE





Friday, December 21, 2012

தமிழனைத்தமிழன் சந்திக்கும்போது


புத்தாண்டு 2013 வாழ்த்து


தமிழனைத்தமிழன் சந்திக்கும்போது
ஆங்கிலம் பேசுதல் சரிதானா!
தன்னினம் என்று பெருமை கொள்ளாமல்
தன்னை மறைத்தல் சரிதானா!

காசுகள் கொடுத்து மதத்தை மாற்றி
பகைமையை வளர்ப்பது சரிதானா!
யாசகம் அளிப்பவர் யாரென அறியா
அடிமை மனநிலை சரிதானா!

மேதைகள் கலங்கிட பேதைகள் முழங்கிட‌
நீதியை வதைப்பது சரிதானா!
ஊதியம் கொடுக்கும் ஆலைகள் முடங்கிட
பாதையை சிதைப்பது சரிதானா!

ஏய்த்துப்பிழைப்பவர் உரைகளை நம்பி
ஏமாந்து அலைவது சரிதானா!
சாய்ந்து விழும்வரை மதுவினை ஊற்றும்
அரசின் வணிகம் சரிதானா!

சாதிகள் சொல்லிச் சனங்களைப்பிரித்து
சண்டைகள் செய்வது சரிதானா!
போதிமரத்துக்கும் சாயம்பூசும்
போர்க்குணம் கொள்வது சரிதானா!

சுயந‌லம் கொண்டவர் புயபலம் கண்டு
சுயபலம் இழப்பது சரிதானா!
வடபுலம் வணங்கித் தென்புலம் தாழ்த்தும்
குணநலம் வளர்ப்பது சரிதானா!

இலவசம் பெறுவதும் அதுவிஷம் எனினும்
பரவசம் அடைவது சரிதானா!
நவரசம் ததும்பும் நாநயம் நம்பி
நாணயம் மறப்பது சரிதானா!

நாத்தழும்பேறிட நாத்திகம் பேசி
மனிதரைத்தொழுவது சரிதானா!
ஆத்திரம் கொண்டு பாத்திரம் உடைத்தபின்
கோத்திரம் கணிப்பது சரிதானா!

அணுவைப்பிளந்த கதிரில் பிறந்த
மின்சக்தியை மறுப்பது சரிதானா!
அனுதினத்தேவைக்கு மாற்றறியாமல்
அரசை இகழ்வது சரிதானா!

பின்னணி தெரிந்தும் அரியணை ஏற்றிப்
பின்னர் பழிப்பது சரிதானா!
மன்னரை மாற்றிடும் முத்திரை இருந்தும்
மெளன நித்திரை சரிதானா!

வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும்
உள்ளம் தொலைப்பது சரிதானா!
தெள்ளத்தெளிந்து நல்லவர் சொன்னதை
எள்ளி நகைப்பது சரிதானா!

குன்றினில் அமர்ந்து  மன்றம் நடத்தும்
குகனே சண்முக வேலவனே!
இன்றுடன் போகட்டும் இனிவரும் ஆண்டில்
நலமே பொங்கிட‌ அருள்வாயா!

நன்றி கலந்த வணக்கம்: திரு சுப்பிரமணியம் அவர்கள்



Wednesday, September 26, 2012

வாங்கித் தந்தார் காந்தி தாத்தா...வித்துப்போட்டார் சோனியா ஆத்தா !

இந்தப் புண்ணிய பூமியோட மகாபிரபு... மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வேறவழியே இல்லாம வணக்கம் சொல்லி, கச்சேரியை ஆரம்பிக்கறான்... பாரத தேசத்து பரிதாப ஜீவன்கள்ல ஒருத்தனான இந்தக் கோவணாண்டி!


''டும்... டும்... டும்... இதனால, சகல உலகத்தினருக்கும் அறிவிக்கறது என்னன்னா... இன்னியிலிருந்து இந்தப் பெருமை வாய்ந்த இந்தியா விற்பனைக்குத் தயாரா இருக்கு. காசு வெச்சு இருக்கற யாரு வேணும்னாலும்... செவ்வாய் கிரகத்தச் சேர்ந்தவங்களா இருந்தாலும்.. எங்க நாட்டுல வந்து கடைவிரிக்கலாம். எங்க நண்பர் அமெரிக்க அதிபர் ஒபாமா... எங்க தலைவி இத்தாலி அன்னை சோனியா ஆசைப்படி... ஆணைப்படி... அவங்களோட 'கைப்பிள்ளை'யாகிய மன்மோகன் சிங் ஆகிய நான் அறிவிக்கிறேன்... டும்... டும்...டும்...''னு உடுக்கை அடிச்சுட்டீங்கனு ஒங்கமேல ஏக கோவத்துல இருக்கறாருங்க எங்க ஊரு இங்கிலிபீசு வாத்தியாரு.

வழக்கம்போல கோணவாய்க்கா மதகுல குந்திக்கிட்டு, இங்கிலீஸ் பேப்பரை கையில வெச்சுக்கிட்டு, போறவன்... வர்றவனெயெல்லாம் கூட்டி உக்கார வெச்சுக்கிட்டு உருமி அடிக்கறாருங்க.

'ஏதோ பொருளாதாரச் சீர்திருத்தம் செய்யறதா சொன்னாங்க. கரன்ட் கட்டு நின்னு போகும்; நின்னுபோன பனியன் கம்பெனிக, நூல் மில்லுக எல்லாம் மறுபடியும் வேகமெடுத்து ஓடும்; வெளிநாட்டுல பதுங்கிக் கெடக்கிற கறுப்புப் பணம் நம்ம ஊரு தெருவுல வெள்ளமா ஓடும்; குடும்பத்துக்கு ரெண்டு லட்சம் வீதம் கிடைக்கும்... இப்படியெல்லாம் கனவா கண்டுக்கிட்டிருந்தா, கடைசியில திங்கற சோத்துல மண்ண அள்ளிப் போட்டுட்டாரு மன்மோகன் சிங். சிலிண்டருக்குக் குடும்பக் கட்டுப்பாடு, டீசல் விலை ஏத்தம், பன்னாட்டுக் கம்பெனிங்களுக்கு வாசலைத் திறந்துவிடறது(51% அன்னிய முதலீடு)னு நாட்டையே அந்நியனுக்கு வித்துப்புட்டாரு சிங்' - இப்படி இந்தத் தள்ளாத வயசுல... பேசிப்பேசியே மதகுல சரிஞ்சு கிடக்கறாருங்க அந்த வாத்தியார்.

பாவம்ங்க அவரு... வெள்ளைக்காரனுங்கள விரட்டி விரட்டி அடிக்கற அளவுக்கு காங்கிரஸ் வீரியமா இருந்த காந்தி காலத்துல பொறந்தவரு. இன்னிக்கு, கதர் கூட்டமே கொள்ளைக் கூட்டமா மாறிப் போயிருக்கற நிலையில... அவரால புலம்ப மட்டும்தான் முடியுது.

நானும் தெரியாமத்தான் கேட்கிறேன்... சீர்திருத்தம்னா, நாட்டை அந்நியனுக்குக் கூறுபோட்டு விக்கிறதுதானுங்களா?

இப்படி கேட்டாக்கா... 'அந்நிய நிறுவனங்கள் கடை திறந்தால், இந்திய விவசாயிகளின் விளைபொருளுங்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்க்கை மலரும்'னு பக்கம் பக்கமா விளம்பரம் கொடுத்து, எங்களயும் இழுத்துவிடறீங்க. கதர் சட்டைங்க காசு பண்றதுக்கும்... கமிஷன் பார்க்கறதுக்கும்... இளிச்சவாயன் நாங்கதான் கிடைச்சோமா?

'மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கிராமங்கள்ல செலவிடப்படும்'னு வேற சொல்லியிருக்கீங்களே... அப்படினா, ஒட்டுமொத்தமா கிராமங்கள்ல இருக்கற நிலங்கள, பன்னாட்டு முதலைங்களும் வளைச்சு வளைச்சு வாங்கிப் போடறதுக்கு வழியைக் காட்டிட்டீங்க, அப்படித்தானே! 'ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'னு வேற கதையளந்திருக்கீங்க. எல்லாமே கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, கேப்பையில நெய் வடியாதே!

'கறை நல்லது’னு டி.வி-யில விளம்பரம் வர்றது கணக்கா... 'டீசல் விலை உயர்வு நல்லது... பொருளாதாரம் வளரும்... நாடு நல்லப் பாதையில பயணிக்கும்..'னு கலர்கலரா கதையளந்திருக்கீங்க. நீங்க ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கி, இதுவரைக்கும் நூறு, நூத்தம்பது தடவை டீசல் விலையை ஏத்தியிருப்பீங்க. 

அப்படியிருந்தும் இதுவரைக்கும் ஏனுங்க ஒங்க பொடலங்கா பொருளாதாரம் உசரவே இல்ல! ஒருவேள நீங்க சொல்ற மாதிரி ஒசந்திருக்குனு வெச்சுப்போம். விவசாய விளைபொருட்களான நெல்லு-கொள்ளு... ஆவக்கா-கோவக்கா... தேங்கா-மாங்கா... பால்-பருத்தி...னு எல்லாத்தோட விலையையும் ஏத்துங்க... அப்பவும் பொருளாதாரம் வளரத்தானே செய்யும்.

'ஈமு கோழியை நம்பி பணம் கட்டுறவனுங்கதானே... எதை வித்தாலும் வாங்கிடுவாங்க'னு ரொம்ப நம்பிக்கையோடத்தானே அந்நியனுக்கு கதவைத் தொறந்துவிட்டிருக்கீங்க. பரவாயில்ல... சீக்கிரமே, ஒட்டுமொத்தமா எல்லாத்தையுமே அந்த அந்நிய முதலைங்க வளைச்சுடப் போறாங்க. அதுக்குப் பிறகு, அவுங்க கடையில விக்கிற விஷத்துல (மரபணு மாற்றுப்பயிர்) விளைஞ்ச கத்திரிக்கா முதல், கருவாடு வரைக்கும் அவுங்க சொல்ற விலையில... அவங்க கொடுக்கற அளவுலதான் வாங்கிச் சாப்பிட வேண்டியிருக்கும். சீனாவுக்கு போனா... பாம்பு சூப் பத்து ரூபா... வெஜிடபிள் சூப் நூறு ரூபாய்னுதான் விக்கும். அதேபோல இவனுங்களும் 'மரபணு மாத்தின காய்கறி 20 ரூபா... இயற்கைக் காய்கறி வேணுமா... 200 ரூபாய்'னு சொல்லுவான்!

நம்ம ஊரு நாட்டுத் தக்காளி... சின்னது, பெருசு... வளைஞ்சது, நெளிஞ்சதுனு இஷ்டத்துக்கு விளைஞ்சு கிடக்கும். உங்க ஊரு விவசாயிக்கு விளைவிக்க தெரியல... இங்க பார்த்தீங்களா... 'சும்மா 15 செ.மீ. ரவுண்டுக்கு ஒரேமாதிரியா விளைஞ்ச தக்காளி'னு விஷத்துல விளைஞ்சத பளபளப்பா இறக்குமதி பண்ணி விப்பான்.

நம்ம ஊருலதான் கோட்-சூட் போட்டு டை கட்டிக்கிட்டு வர்றவன், கழுதை விட்டையை பொட்டலம் கட்டி வித்தாகூட... 'திஸ் ஈஸ்... விட்டமின்- பி'னு சொல்லிக்கிட்டே வாங்கி முழுங்கறதுக்கு ஆளுங்க இருக்கே.
ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2 ஜி ஊழல் எல்லாம் தாண்டி, இப்ப நிலக்கரி ஊழல்ல வந்து நிக்கறீங்க. நாடே இதைப் பத்தித்தான் இப்ப உருமி அடிக்குது. 'ஏண்டா... இந்தியானு ஒண்ணு இருந்தாதானே... ஊழல்பத்தியெல்லாம் பேசுவீங்க. ஒட்டுமொத்தமா அந்நியனுக்கு வித்துட்டா என்ன செய்வீங்க?'னுதானே 'சீர்திருத்தம்'ங்கற பேருல... அன்னை சோனியா காந்தியோட உத்தரவுப்படி நாட்டை விலை பேசியிருக்கீங்க.

'கேட்டாக்கா... வெறும் 51% சதவிகிதத்தைத்தான் தந்திருக்கோம். என்ன இருந்தாலும், இந்தியாவோட சட்டதிட்டங்கள மதிச்சுதான் அவங்கள்லாம் நடந்துக்குவாங்க. நம்மள மீறி எதையும் செய்ய முடியாது... சட்டப் பாதுகாப்பு இருக்குது'னு வியாக்கியானம் வேற பேசறீங்க.

ம்க்கும்... காவிரி ஆணையத்தோட தலைவர்னு சொல்லிக்கிட்டு உக்கார்ந்திருக்கீங்க நீங்க. ஆனா, நீங்க தலையிட்ட பிறகும்கூட தமிழ்நாட்டுக்கு காவிரித் தண்ணியைத் தரமுடியாதுனு சொல்லிட்டு, உங்க மூஞ்சியில அடிச்ச மாதிரி ஆணையக் கூட்டத்தைவிட்டே வெளியில எழுந்திருச்சி போயிருக்கார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். உள்ளூர்க்காரன்கிட்டயே ஒங்க அதிகாரம் செல்லுபடியாகல. இதுல வெளிநாட்டுக்காரன் மட்டும் கேட்டுடுவானாக்கும்?

இந்தியாவே திரண்டு பந்த் நடத்திக்கிட்டிருக்குது ஒங்களோட முடிவுகளை எதிர்த்து. ஆனா, அதே தினத்துல... 'அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி... சட்டம் அமலுக்கு வந்தது'னு வீம்பா அறிவிக்கறீங்க. நாட்டுமேல என்னமோ ஒங்களுக்கு மட்டுமே அக்கறை இருக்கற மாதிரி தடலாடியா முடிவெடுக்கறீங்க. இதெல்லாம் நல்லதுக்கே இல்லீங்க. 'மோகன்தாஸ் காந்தி வாங்கித் தந்ததை... சோனியா காந்தி விலை பேசி வித்துப்புட்டாங்க'ங்கற கெட்ட பேரு வேணாமுங்க.

'தற்சார்புப் பொருளாதாரத்தை அழிச்சு... புறசார்புப் பொருளாதாரத்தை அனுமதிச்சா... நாடு நாசமாகும்'கறது... தொல்காப்பியர், நாலடியார், திருவள்ளுவர் காலத்துல இருந்தே நம்ம நாட்டுல கடைபிடிச்சுட்டு வர்ற கொள்கை. ஆனா... 'மாப்பிள்ளை செத்தா என்ன... பொண்ணு செத்தா என்ன... மாலை பணம் கிடைச்சா போதும்'கிற மனநிலையில் இருக்கிற நீங்க... இதையெல்லாம் எங்க காதுல ஏத்திக்கப் போறீங்க?

வாழ்க பாரதம்... வாழ்க ஜனநாயகம்!

-கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 10-10-12

Monday, July 2, 2012

வரப்போகும் ஜனாதிபதியின் ” யோக்கியதாம்சங்கள் “…..


அடுத்ததாக வரக்கூடிய ஜனாதிபதியை -
தேர்ந்தெடுக்கும் உரிமை தான் நமக்கு கிடையாது !
atleast அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும்
உரிமையாவது உண்டல்லவா ?
அதை யாரும் பறித்துக்கொள்ள முடியாதே -
இப்போதைக்கு !

மாண்புமிகு அடுத்த ஜனாதிபதியைப் பற்றிய
சில விவரங்கள் – நல்லதும் கெட்டதும் !

வயது 77. படிப்பு  MA,BL.
பரம்பரைத் தொழில் -வேறென்ன ? அரசியல் தான் !
முழுநேர அரசியல்வாதி  -
அதாவது பிழைப்பே அரசியல் தான் !
ஆமாம் – தந்தையும் வங்காளத்தில் காங்கிரஸ் தலைவர் !

வயது 34 ஆகும்போது முதல் தடவையாக,
ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.
1973ல் முதல் தடவையாக மத்திய அமைச்சர் ஆனார்.
1982-84ல் முதல் தடவையாக நிதி அமைச்சர்.
அப்போதே இவர் நிதியமைச்சராக இருந்தபோது,
இப்போதைய பிரதமர் ம.மோ.சிங் இவருக்கு  கீழே –
ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியில் இருந்தார் !
( இவர் ஏன் பிரதமரை மதிப்பதில்லை
என்பது இப்போது  சுலபமாகப் புரியுமே !)
இந்திரா காந்தி அகால மரணம் அடைந்தபோது,
பிரதமர் பதவியை இவர் கைப்பற்ற முயற்சி செய்தார் -
விளைவு, ராஜீவ் காந்தியால் கட்சியை விட்டு
வெளியேற்றப்பட்டார்.சமாஜ்வாதி காங்கிரசைத் துவக்கினார்.

இவரை புத்திசாலி என்பதை விட -
சாமர்த்தியசாலி என்று கூறலாம்.
இவரது நிலைத்த முன்னேற்றத்திற்கு காரணமே இவரது
ஒரு வித்தியாசமான, வேறுபட்ட  குணம் தான்.
தனக்கு போட்டியாக இருப்பவரகளை மிரட்டி பணிய வைக்க
முயற்சிப்பார். அவர் பணியவில்லை என்றால் -
சற்றும் தயங்காமல் -
இவர் அவருக்கு பணிந்து போய் விடுவார் !

எனவே, ராஜீவ் காந்தியிடம் சரணாகதியாகி
மீண்டும் முதலில் கட்சியிலும், பிறகு
மந்திரி சபையிலும் இடம் பிடித்தார் !

மீண்டும் ஏறுமுகம்.
திட்டக்குழு துணைத்தலைவர், வெளியுறவுத்துறை
அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கடைசியாக
நிதி அமைச்சர் பதவிகள் !

அடக்கமாக இருப்பது போல் இருந்தாலும், என்றைக்கு
இருந்தாலும் இவர் பார்வை பிரதமர் பதவி மீது தான்.
இவருக்கு கீழ் அதிகாரியாகப்  பணி புரிந்த மன்மோகன் சிங் -
இவரை விட உயரமான இடத்தில் –
பிரதமராக இருப்பது இவருக்கு தீராத எரிச்சல்.

என்றைக்கு இருந்தாலும், ராகுல் காந்தி பிரதமர் ஆவதில்
இவரால் இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்பதால் இவரை
வழியிலிருந்து  அகற்ற, வேண்டா வெறுப்பாக
சோனியா அம்மையார் இவர் பெயரை குடியரசுத்தலவர்
பதவிக்கு பரிந்துரைத்திருக்கிறார் !

இது வரை அவர் பற்றிய வெளிப்படையான
அறிமுகம் பார்த்தீர்கள்.

இனி சொல்லப்போவது அதிகம் வெளியில் தெரியாத
பெருமைகள் -

இந்திரா அம்மையார் எமர்ஜென்சியை கொண்டுவந்தபோது
இவர் அவருக்கு மிகவும் உறுதுணையாக உள்துறை
அமைச்சகத்தில் பணி புரிந்தார். அடக்குமுறையில்
சஞ்ஜய் காந்தியுடன் கைகோத்தார். இவர் மீது பல
புகார்கள் கூறப்பட்டன.

முக்கியமான புகார்களில் ஒன்று அப்போது
இந்திராவை காந்தியை சந்தோஷப்படுத்த,
ஜெய்பூர் மகாராணி காயத்ரி தேவியை
திகார் சிறையில் வைத்து வதைத்தது !

எமர்ஜென்சி அக்கிரமங்கள் பற்றி எழுப்பப்பட்ட சுமார்
46,000 புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான
நீதிபதி ஷா கமிஷனின் இறுதி அறிக்கையில், பதவியை
துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது கடுமையாக குற்றம்
சாட்டப்பட்டு இருந்தது.

ஆனால் விசாரணை அறிக்கை செயல்படுவதற்குள்
மீண்டும் இந்திரா காந்தி அதிகாரத்திற்கு வந்து விட்டதால்
அறிக்கை குப்பைக்கூடைக்கு போய் விட்டது.
ஷா கமிஷனில் இவருக்கு எதிராக சாட்சி கூறிய அதிகாரிகள்
பழிவாங்கப்பட்டனர் - தூக்கி எறியப்பட்டனர்.

2009ல் ஈழத்தில் ராஜபக்சே அரசு லட்சக்கணக்கில்
தமிழர்களை திட்டமிட்டு, கொத்து கொத்தாக 
அழித்துக்கொண்டிருந்தபோது -
இவர் இங்கே வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து
சகல விதத்திலும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவு கொடுத்தார் !

இவர் நிதியமைச்சராக இருந்தபோது தான் -
உள்நாட்டில் விலைவாசி வானளவு உயர்ந்தது !
டாலர் கையிருப்பு  படுபாதாளம் சென்றது !
ரூபாயின் மதிப்பு இதுவரை வரலாற்றில் இல்லாத
அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
பெட்ரோல் விலை 11 முறை உயர்ந்தது.
தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தது.
பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்தது.
பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும்
கோடிக்கணக்கில் சலுகைகள் தரப்பட்டன.
அவர்களுக்கான வரிகள் தளர்த்தப்பட்டன.
சர்வதேச தரமதிப்பு பட்டியலில் இந்தியாவின்
மதிப்பு குறைக்கப்பட்டது.

இன்னும் எத்தனை பொருளாதார மேதைகள்
வந்தாலும் இதை சீர்படுத்த எத்தனையோ
ஆண்டுகள் ஆகும்.

கருப்புப் பணத்தை கண்டெடுக்க உருப்படியாக
எதுவும் செய்யப்படவில்லை.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய
பணத்தை கொண்டு வர தீவிர முயற்சி எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை.
அர்த்தமில்லாத சாக்குபோக்குகள் சொல்லியே
காலத்தைக் கழித்தார்!
ஜெர்மனியிலிருந்தும், ஸ்விஸ் நாட்டிலிருந்தும் கிடைத்த
பெயர்களை, கோர்ட்டில் கூட வெளியிட மறுத்தார்.

நிதியமைச்சராக படுமோசமாகப் பணியாற்றிய ஒருவரை
வீட்டுக்குத் துரத்துவதற்கு பதிலாக, இந்த நாட்டு அரசியல்
பிரமோஷன் கொடுத்து ஜனாதிபதி ஆக்குகிறது !

பல மத்திய அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்
பலத்த விளம்பரம் பெற்றாலும்,
இவர் மீதான சில குற்றச்சாட்டுகள் மட்டும் எப்படியோ
அமுக்கப்பட்டு – விளம்பரம் பெறாமல் பார்த்துக்
கொள்ளப்பட்டன.

அப்படியும் – குடியரசுத் தலவர் பதவிக்கு இவர் பெயர்
பரிந்துரை செய்யப்பட்டவுடன், டீம்  அண்ணா குழுவினர் -
இவர் மீதான, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும்
சில குற்றச்சாட்டுகளை நினைவுறுத்தி, 
அவற்றின் மீது உடனடியாக, சுதந்திரமான விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர்.

அதில் ஒன்று -

ஆப்பிரிக்காவின் “காணா” நாட்டிற்கு உதவி செய்வதற்காக
“ஹராரே” திட்டத்தின் கீழ் அரிசி அனுப்ப வேண்டிய
விவகாரத்தில், இந்திய அரசு உணவுப் பொருள் கார்பொரேஷன்
மூலமாக அரிசி அனுப்புவதற்கு  பதிலாக, தனியார்
முதலாளிகளுக்கு அனுமதி கொடுத்த வகையில்
சுமார் 2,500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும்,
இதில் இந்திய வெளியுறவுத் துறைக்கு (இவர் தான் அப்போது
அமைச்சர் ) பெரிய அளவில் தொடர்பு இருப்பதாகவும்
“காணா” அரசு புகார் கூறி இருந்தது. இது பற்றி
விசாரணை நடத்தக் கோரி காணா அரசு விடுத்த கோரிக்கை -
இதுவரை கண்டு கொள்ளப்படவே இல்லை !

மற்றொன்று  -நேவீ வார் ரூம் லீக் என்று கூறப்பட்ட -
“ஸ்கார்பென்” நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கும் விஷயத்தில்,
இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த
500 கோடி ரூபாய் ஊழல். இது ஜேம்ஸ்பாண்ட் கதைகளை
எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் மர்மக்கதை !

2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படைக்காக
ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க, பிரான்ஸ் நாட்டு
நிறுவனம் “தேல்ஸ்” உடன் செய்து கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்திற்கு இவர் ராணுவ அமைச்சர் என்கிற முறையில்
அனுமதி அளித்திருக்கிறார். இந்த நிறுவனம் லஞ்சம்
கொடுத்து ஆர்டர் பெறுவதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம் !

ஏற்கெனவே மலேசியா, தைவான், தென் ஆப்பிரிக்கா ஆகிய
நாடுகளில் லஞ்சம் கொடுத்த விவரங்கள் வெளியாகி
இருக்கின்றன.
தென் ஆப்பிரிக்க குடியரசின் துணைத்தலவர் ஜாக்கப் ஹூமா,
இந்த நீர்மூழ்கி கப்பல் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியது
நிரூபணமாகி 15 வருட சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.

இந்தியாவிற்கு நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதில்
500 கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருக்கிறது என்று
முன்பு “அவுட்லுக்” பத்திரிகை ஆதாரங்களுடன் தகவல்
வெளியிட்டிருந்தது. அது வெளியிட்டிருந்த ஒரு மின் அஞ்சல்
நீர்மூழ்கிக் கப்பல் நிறுவனத்தின் CEO -
இந்திய தொழிலதிபர் அபிஷேக் வர்மாவுக்கு அனுப்பியது.
அதில் ஸ்கார்பென் ஒப்பந்த விலையில் 4 % தொகையை
தருவதாக நாங்கள் உறுதி செய்கிறோம் என்று
குறிப்பிட்டிருக்கிறது.  6 நீர்மூழ்கிக் கப்பல்களின்
மொத்த விலை சுமார் 19,000 கோடி. இந்திய கடற்படை
நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தம் தங்கள்
நிறுவனத்திற்கே கிடைக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட
முடிவை எடுப்பவர்களுக்காகவும், அதனை ஏற்பாடு
செய்து கொடுப்பவர்களுக்காகவும் இந்த கமிஷன்
தொழிலதிபர் அபிஷேக் வர்மாவிற்கு அளிக்கப்படும் என்று
மின் அஞ்சல் கூறுகிறது.

இது தொடர்பாக, 2007ஆம் ஆண்டு வழக்கறிஞர்
பிரஷாந்த் பூஷன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு
பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். அது இன்னும்
நிலுவையில் கிடக்கிறது.( 5 ஆண்டுகள் தானே ஆகின்றன -
அதற்குள்ளாக விசாரணைக்கு வந்து விடுமா என்ன ?
அதுவும் சம்பந்தப்பட்டவர்  யார் ? அவரது பின்னணி
என்ன ? இவற்றை எல்லாம் யோசிக்க வேண்டாமா ?)

இவர் ஜனாதிபதியாகி விட்டால் -
அரசியல் சட்ட விதிகளின்படி, ஜனாதிபதி பதவியில்
இருக்கும் வரை இவர் மீதான குற்றச்சாட்டுகள் மீது
எந்தவித  மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இப்போதே வயது 77. ஐந்து வருடங்கள் பதவி முடிந்து
மீண்டும் இவர் சாதாரண குடிமகனாக வெளி வரும்போது,
இவர் வயது  82 ஆக இருக்கும். 
அதற்குப் பின்னரா நடவடிக்கை  ?

முதிர்ந்த ஜனநாயக நாடுகளில், பதவியில் உள்ளவர்கள்
மீது ஊழல் புகார் வந்தால் -  சுதந்திரமான
முறையில் விசாரணை நடைபெறுவதற்காக,
விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை அவர்கள்
தங்கள் பதவியை விட்டு விலகி நிற்பார்கள்.

நம் நாட்டில் யார் மீதாவது ஊழல் புகார்கள் இருந்தால் -
அதிலிருந்து அவர்கள் தப்பிக்க இந்திய அரசியலில்
ஒரு புது வழி உண்டாக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்று அவர்களை கவர்னர்  ஆவது – அல்லது
ஜனாதிபதி ஆவது !

இனி இவர் ஜனாதிபதி ஆவதை யாரும் தடுக்க முடியாது.
இவர் ஜனாதிபதி ஆகி விட்ட பிறகு நான் இதையெல்லாம்
எழுதினால் – நாட்டின் முதல் குடிமகனை அவமதிப்பது
போல் ஆகி விடும் அல்லவா ?  அதற்காகத்தான்
அவசரமாக இப்போதே, அவர் சாதாரண குடிமகனாக
இருக்கும்போதே  எழுதுகிறேன்.

என்ன இருந்தாலும்  பதவிக்கு மதிப்பு
கொடுக்க வேண்டும் அல்லவா  ???  !!!