ADS

AD

Friday, November 11, 2011

நலம் தரும் விரல் முத்திரைகள்


முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப்படங்களையும் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.

இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.

ஞான முத்திரை

கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.

நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

வருண முத்திரை

பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கிறார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது என்கிறார்கள்.

சூன்ய முத்திரை

கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும் போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.

இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.


ப்ராண முத்திரை

கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.

இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்தமான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும் கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.

அபான முத்திரை

கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது.

இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.

அபான வாயு முத்திரை

அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியை பெருவிரலின் ஆரம்ப பாகத்தில் வைத்தால் அபான வாயு முத்திரை உண்டாகிறது. அதாவது நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல்களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொட்டு, ஆட்காட்டி விரலை மடித்து பெருவிரலின் நுனி பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது

இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.

லிங்க முத்திரை

படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டிய நிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக் கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.

சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.

இனி இந்த முத்திரைகளைச் செய்யும் போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.

முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.

பின் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள்.

இந்த முத்திரைகளை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், படுத்த நிலையிலும், நடந்து கொண்டும் கூட செய்யலாம். ஆனால் பரபரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக இருப்பது மிக முக்கியம்.

இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவையான முத்திரைகளைச் செய்யலாம் என்கிறார்கள். சிலர் பத்து அல்லது பதினைந்து நிமிட காலங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.


ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரிசோதித்துக் கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை. எனவே செலவோ, பிரயாசையோ இல்லாத இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா:

Monday, November 7, 2011

அணு விஞ்ஞானி அப்துல் கலாம்!


அப்துல் கலாம் கூடங்குளம் சென்று வந்துள்ளார். அங்குள்ள அணு மின் உலை அபாயமற்றது; வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லியுள்ளார். இது கிட்டத்தட்ட எதிர்பார்த்ததுதான். அப்துல் கலாம் அணு மின்சாரத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். (நானும்தான்.) எனவே அவர் மாற்றாக எதையும் சொல்லியிருக்கப்போவதில்லை.



ஆனால் பிரச்னை, அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியா என்பதைப் பற்றியது. அவர் அணு விஞ்ஞானி அல்லர். அப்படி அவர் தன்னை ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. அவர் ஒரு ஏரோனாட்டிகல் பொறியாளர். ஒரு கட்டத்தில் இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார். அது மட்டுமே அவரை அணு விஞ்ஞானி ஆக்கிவிடாது. எனவே ஊடகங்கள் அவரை அணு விஞ்ஞானி என்று அழைப்பதைத் தவிர்க்கவேண்டும்.



அப்படியானால், அப்துல் கலாமால் அணு சக்தி பற்றிய விஷயங்களையும் அது தொடர்பான அபாயங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்றா சொல்வது? இல்லை! நல்ல அறிவியல் புரிதல் கொண்ட எவராலுமே அணு சக்தி, அதன் ஆற்றல், அதன் அபாயங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் போன்ற பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவருக்குக் கட்டாயம் இதுபற்றி நல்ல புரிதல் இருந்தாகவேண்டும்.

அந்த மட்டத்தில், அவரை அணு விஞ்ஞானி என்று அழைக்காமல் போகலாமே தவிர, கூடங்குளத்தில் பிறர் சொல்வதுபோல ஆபத்து என்பதெல்லாம் இல்லை என்று அவர் சான்றிதழ் கொடுத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

கலாம் அல்லர் அரசியல்வாதி. அவர் குஜராத் கலவரம் பற்றி என்ன சொன்னார், இலங்கைப் படுகொலை பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் கேட்பவர்கள்தான் அரசியல்வாதிகள்! அறிவியல், தொழில்நுட்பம் மூலம் உலகை நல்லபடியாக மாற்றமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் கலாம், அது தொடர்பான விவாதங்களில்தான் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது வெளிப்படை. பிற விஷயங்களில் கருத்து சொல்ல அவர் தயங்குகிறார். எனவே, அதில் அவர் கருத்து என்ன, இதில் அவர் கருத்து என்ன என்று தோண்டிப் பார்க்காமல், அணு சக்தி தொடர்பாக அவர் நியாயமான கருத்தை முன்வைக்கக்கூடியவரா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்.


அவரை நம்பாதவர்கள், அவரை அரசவைக் கோமாளி என்று சாடுபவர்கள் சாடிவிட்டுப் போங்கள்.

Thanks to :

Friday, November 4, 2011

அன்னூர் தொலைக்காட்சி