ADS

AD

Friday, December 21, 2012

தமிழனைத்தமிழன் சந்திக்கும்போது


புத்தாண்டு 2013 வாழ்த்து


தமிழனைத்தமிழன் சந்திக்கும்போது
ஆங்கிலம் பேசுதல் சரிதானா!
தன்னினம் என்று பெருமை கொள்ளாமல்
தன்னை மறைத்தல் சரிதானா!

காசுகள் கொடுத்து மதத்தை மாற்றி
பகைமையை வளர்ப்பது சரிதானா!
யாசகம் அளிப்பவர் யாரென அறியா
அடிமை மனநிலை சரிதானா!

மேதைகள் கலங்கிட பேதைகள் முழங்கிட‌
நீதியை வதைப்பது சரிதானா!
ஊதியம் கொடுக்கும் ஆலைகள் முடங்கிட
பாதையை சிதைப்பது சரிதானா!

ஏய்த்துப்பிழைப்பவர் உரைகளை நம்பி
ஏமாந்து அலைவது சரிதானா!
சாய்ந்து விழும்வரை மதுவினை ஊற்றும்
அரசின் வணிகம் சரிதானா!

சாதிகள் சொல்லிச் சனங்களைப்பிரித்து
சண்டைகள் செய்வது சரிதானா!
போதிமரத்துக்கும் சாயம்பூசும்
போர்க்குணம் கொள்வது சரிதானா!

சுயந‌லம் கொண்டவர் புயபலம் கண்டு
சுயபலம் இழப்பது சரிதானா!
வடபுலம் வணங்கித் தென்புலம் தாழ்த்தும்
குணநலம் வளர்ப்பது சரிதானா!

இலவசம் பெறுவதும் அதுவிஷம் எனினும்
பரவசம் அடைவது சரிதானா!
நவரசம் ததும்பும் நாநயம் நம்பி
நாணயம் மறப்பது சரிதானா!

நாத்தழும்பேறிட நாத்திகம் பேசி
மனிதரைத்தொழுவது சரிதானா!
ஆத்திரம் கொண்டு பாத்திரம் உடைத்தபின்
கோத்திரம் கணிப்பது சரிதானா!

அணுவைப்பிளந்த கதிரில் பிறந்த
மின்சக்தியை மறுப்பது சரிதானா!
அனுதினத்தேவைக்கு மாற்றறியாமல்
அரசை இகழ்வது சரிதானா!

பின்னணி தெரிந்தும் அரியணை ஏற்றிப்
பின்னர் பழிப்பது சரிதானா!
மன்னரை மாற்றிடும் முத்திரை இருந்தும்
மெளன நித்திரை சரிதானா!

வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும்
உள்ளம் தொலைப்பது சரிதானா!
தெள்ளத்தெளிந்து நல்லவர் சொன்னதை
எள்ளி நகைப்பது சரிதானா!

குன்றினில் அமர்ந்து  மன்றம் நடத்தும்
குகனே சண்முக வேலவனே!
இன்றுடன் போகட்டும் இனிவரும் ஆண்டில்
நலமே பொங்கிட‌ அருள்வாயா!

நன்றி கலந்த வணக்கம்: திரு சுப்பிரமணியம் அவர்கள்



Wednesday, September 26, 2012

வாங்கித் தந்தார் காந்தி தாத்தா...வித்துப்போட்டார் சோனியா ஆத்தா !

இந்தப் புண்ணிய பூமியோட மகாபிரபு... மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வேறவழியே இல்லாம வணக்கம் சொல்லி, கச்சேரியை ஆரம்பிக்கறான்... பாரத தேசத்து பரிதாப ஜீவன்கள்ல ஒருத்தனான இந்தக் கோவணாண்டி!


''டும்... டும்... டும்... இதனால, சகல உலகத்தினருக்கும் அறிவிக்கறது என்னன்னா... இன்னியிலிருந்து இந்தப் பெருமை வாய்ந்த இந்தியா விற்பனைக்குத் தயாரா இருக்கு. காசு வெச்சு இருக்கற யாரு வேணும்னாலும்... செவ்வாய் கிரகத்தச் சேர்ந்தவங்களா இருந்தாலும்.. எங்க நாட்டுல வந்து கடைவிரிக்கலாம். எங்க நண்பர் அமெரிக்க அதிபர் ஒபாமா... எங்க தலைவி இத்தாலி அன்னை சோனியா ஆசைப்படி... ஆணைப்படி... அவங்களோட 'கைப்பிள்ளை'யாகிய மன்மோகன் சிங் ஆகிய நான் அறிவிக்கிறேன்... டும்... டும்...டும்...''னு உடுக்கை அடிச்சுட்டீங்கனு ஒங்கமேல ஏக கோவத்துல இருக்கறாருங்க எங்க ஊரு இங்கிலிபீசு வாத்தியாரு.

வழக்கம்போல கோணவாய்க்கா மதகுல குந்திக்கிட்டு, இங்கிலீஸ் பேப்பரை கையில வெச்சுக்கிட்டு, போறவன்... வர்றவனெயெல்லாம் கூட்டி உக்கார வெச்சுக்கிட்டு உருமி அடிக்கறாருங்க.

'ஏதோ பொருளாதாரச் சீர்திருத்தம் செய்யறதா சொன்னாங்க. கரன்ட் கட்டு நின்னு போகும்; நின்னுபோன பனியன் கம்பெனிக, நூல் மில்லுக எல்லாம் மறுபடியும் வேகமெடுத்து ஓடும்; வெளிநாட்டுல பதுங்கிக் கெடக்கிற கறுப்புப் பணம் நம்ம ஊரு தெருவுல வெள்ளமா ஓடும்; குடும்பத்துக்கு ரெண்டு லட்சம் வீதம் கிடைக்கும்... இப்படியெல்லாம் கனவா கண்டுக்கிட்டிருந்தா, கடைசியில திங்கற சோத்துல மண்ண அள்ளிப் போட்டுட்டாரு மன்மோகன் சிங். சிலிண்டருக்குக் குடும்பக் கட்டுப்பாடு, டீசல் விலை ஏத்தம், பன்னாட்டுக் கம்பெனிங்களுக்கு வாசலைத் திறந்துவிடறது(51% அன்னிய முதலீடு)னு நாட்டையே அந்நியனுக்கு வித்துப்புட்டாரு சிங்' - இப்படி இந்தத் தள்ளாத வயசுல... பேசிப்பேசியே மதகுல சரிஞ்சு கிடக்கறாருங்க அந்த வாத்தியார்.

பாவம்ங்க அவரு... வெள்ளைக்காரனுங்கள விரட்டி விரட்டி அடிக்கற அளவுக்கு காங்கிரஸ் வீரியமா இருந்த காந்தி காலத்துல பொறந்தவரு. இன்னிக்கு, கதர் கூட்டமே கொள்ளைக் கூட்டமா மாறிப் போயிருக்கற நிலையில... அவரால புலம்ப மட்டும்தான் முடியுது.

நானும் தெரியாமத்தான் கேட்கிறேன்... சீர்திருத்தம்னா, நாட்டை அந்நியனுக்குக் கூறுபோட்டு விக்கிறதுதானுங்களா?

இப்படி கேட்டாக்கா... 'அந்நிய நிறுவனங்கள் கடை திறந்தால், இந்திய விவசாயிகளின் விளைபொருளுங்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்க்கை மலரும்'னு பக்கம் பக்கமா விளம்பரம் கொடுத்து, எங்களயும் இழுத்துவிடறீங்க. கதர் சட்டைங்க காசு பண்றதுக்கும்... கமிஷன் பார்க்கறதுக்கும்... இளிச்சவாயன் நாங்கதான் கிடைச்சோமா?

'மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கிராமங்கள்ல செலவிடப்படும்'னு வேற சொல்லியிருக்கீங்களே... அப்படினா, ஒட்டுமொத்தமா கிராமங்கள்ல இருக்கற நிலங்கள, பன்னாட்டு முதலைங்களும் வளைச்சு வளைச்சு வாங்கிப் போடறதுக்கு வழியைக் காட்டிட்டீங்க, அப்படித்தானே! 'ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'னு வேற கதையளந்திருக்கீங்க. எல்லாமே கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, கேப்பையில நெய் வடியாதே!

'கறை நல்லது’னு டி.வி-யில விளம்பரம் வர்றது கணக்கா... 'டீசல் விலை உயர்வு நல்லது... பொருளாதாரம் வளரும்... நாடு நல்லப் பாதையில பயணிக்கும்..'னு கலர்கலரா கதையளந்திருக்கீங்க. நீங்க ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கி, இதுவரைக்கும் நூறு, நூத்தம்பது தடவை டீசல் விலையை ஏத்தியிருப்பீங்க. 

அப்படியிருந்தும் இதுவரைக்கும் ஏனுங்க ஒங்க பொடலங்கா பொருளாதாரம் உசரவே இல்ல! ஒருவேள நீங்க சொல்ற மாதிரி ஒசந்திருக்குனு வெச்சுப்போம். விவசாய விளைபொருட்களான நெல்லு-கொள்ளு... ஆவக்கா-கோவக்கா... தேங்கா-மாங்கா... பால்-பருத்தி...னு எல்லாத்தோட விலையையும் ஏத்துங்க... அப்பவும் பொருளாதாரம் வளரத்தானே செய்யும்.

'ஈமு கோழியை நம்பி பணம் கட்டுறவனுங்கதானே... எதை வித்தாலும் வாங்கிடுவாங்க'னு ரொம்ப நம்பிக்கையோடத்தானே அந்நியனுக்கு கதவைத் தொறந்துவிட்டிருக்கீங்க. பரவாயில்ல... சீக்கிரமே, ஒட்டுமொத்தமா எல்லாத்தையுமே அந்த அந்நிய முதலைங்க வளைச்சுடப் போறாங்க. அதுக்குப் பிறகு, அவுங்க கடையில விக்கிற விஷத்துல (மரபணு மாற்றுப்பயிர்) விளைஞ்ச கத்திரிக்கா முதல், கருவாடு வரைக்கும் அவுங்க சொல்ற விலையில... அவங்க கொடுக்கற அளவுலதான் வாங்கிச் சாப்பிட வேண்டியிருக்கும். சீனாவுக்கு போனா... பாம்பு சூப் பத்து ரூபா... வெஜிடபிள் சூப் நூறு ரூபாய்னுதான் விக்கும். அதேபோல இவனுங்களும் 'மரபணு மாத்தின காய்கறி 20 ரூபா... இயற்கைக் காய்கறி வேணுமா... 200 ரூபாய்'னு சொல்லுவான்!

நம்ம ஊரு நாட்டுத் தக்காளி... சின்னது, பெருசு... வளைஞ்சது, நெளிஞ்சதுனு இஷ்டத்துக்கு விளைஞ்சு கிடக்கும். உங்க ஊரு விவசாயிக்கு விளைவிக்க தெரியல... இங்க பார்த்தீங்களா... 'சும்மா 15 செ.மீ. ரவுண்டுக்கு ஒரேமாதிரியா விளைஞ்ச தக்காளி'னு விஷத்துல விளைஞ்சத பளபளப்பா இறக்குமதி பண்ணி விப்பான்.

நம்ம ஊருலதான் கோட்-சூட் போட்டு டை கட்டிக்கிட்டு வர்றவன், கழுதை விட்டையை பொட்டலம் கட்டி வித்தாகூட... 'திஸ் ஈஸ்... விட்டமின்- பி'னு சொல்லிக்கிட்டே வாங்கி முழுங்கறதுக்கு ஆளுங்க இருக்கே.
ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2 ஜி ஊழல் எல்லாம் தாண்டி, இப்ப நிலக்கரி ஊழல்ல வந்து நிக்கறீங்க. நாடே இதைப் பத்தித்தான் இப்ப உருமி அடிக்குது. 'ஏண்டா... இந்தியானு ஒண்ணு இருந்தாதானே... ஊழல்பத்தியெல்லாம் பேசுவீங்க. ஒட்டுமொத்தமா அந்நியனுக்கு வித்துட்டா என்ன செய்வீங்க?'னுதானே 'சீர்திருத்தம்'ங்கற பேருல... அன்னை சோனியா காந்தியோட உத்தரவுப்படி நாட்டை விலை பேசியிருக்கீங்க.

'கேட்டாக்கா... வெறும் 51% சதவிகிதத்தைத்தான் தந்திருக்கோம். என்ன இருந்தாலும், இந்தியாவோட சட்டதிட்டங்கள மதிச்சுதான் அவங்கள்லாம் நடந்துக்குவாங்க. நம்மள மீறி எதையும் செய்ய முடியாது... சட்டப் பாதுகாப்பு இருக்குது'னு வியாக்கியானம் வேற பேசறீங்க.

ம்க்கும்... காவிரி ஆணையத்தோட தலைவர்னு சொல்லிக்கிட்டு உக்கார்ந்திருக்கீங்க நீங்க. ஆனா, நீங்க தலையிட்ட பிறகும்கூட தமிழ்நாட்டுக்கு காவிரித் தண்ணியைத் தரமுடியாதுனு சொல்லிட்டு, உங்க மூஞ்சியில அடிச்ச மாதிரி ஆணையக் கூட்டத்தைவிட்டே வெளியில எழுந்திருச்சி போயிருக்கார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். உள்ளூர்க்காரன்கிட்டயே ஒங்க அதிகாரம் செல்லுபடியாகல. இதுல வெளிநாட்டுக்காரன் மட்டும் கேட்டுடுவானாக்கும்?

இந்தியாவே திரண்டு பந்த் நடத்திக்கிட்டிருக்குது ஒங்களோட முடிவுகளை எதிர்த்து. ஆனா, அதே தினத்துல... 'அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி... சட்டம் அமலுக்கு வந்தது'னு வீம்பா அறிவிக்கறீங்க. நாட்டுமேல என்னமோ ஒங்களுக்கு மட்டுமே அக்கறை இருக்கற மாதிரி தடலாடியா முடிவெடுக்கறீங்க. இதெல்லாம் நல்லதுக்கே இல்லீங்க. 'மோகன்தாஸ் காந்தி வாங்கித் தந்ததை... சோனியா காந்தி விலை பேசி வித்துப்புட்டாங்க'ங்கற கெட்ட பேரு வேணாமுங்க.

'தற்சார்புப் பொருளாதாரத்தை அழிச்சு... புறசார்புப் பொருளாதாரத்தை அனுமதிச்சா... நாடு நாசமாகும்'கறது... தொல்காப்பியர், நாலடியார், திருவள்ளுவர் காலத்துல இருந்தே நம்ம நாட்டுல கடைபிடிச்சுட்டு வர்ற கொள்கை. ஆனா... 'மாப்பிள்ளை செத்தா என்ன... பொண்ணு செத்தா என்ன... மாலை பணம் கிடைச்சா போதும்'கிற மனநிலையில் இருக்கிற நீங்க... இதையெல்லாம் எங்க காதுல ஏத்திக்கப் போறீங்க?

வாழ்க பாரதம்... வாழ்க ஜனநாயகம்!

-கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 10-10-12

Monday, July 2, 2012

வரப்போகும் ஜனாதிபதியின் ” யோக்கியதாம்சங்கள் “…..


அடுத்ததாக வரக்கூடிய ஜனாதிபதியை -
தேர்ந்தெடுக்கும் உரிமை தான் நமக்கு கிடையாது !
atleast அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும்
உரிமையாவது உண்டல்லவா ?
அதை யாரும் பறித்துக்கொள்ள முடியாதே -
இப்போதைக்கு !

மாண்புமிகு அடுத்த ஜனாதிபதியைப் பற்றிய
சில விவரங்கள் – நல்லதும் கெட்டதும் !

வயது 77. படிப்பு  MA,BL.
பரம்பரைத் தொழில் -வேறென்ன ? அரசியல் தான் !
முழுநேர அரசியல்வாதி  -
அதாவது பிழைப்பே அரசியல் தான் !
ஆமாம் – தந்தையும் வங்காளத்தில் காங்கிரஸ் தலைவர் !

வயது 34 ஆகும்போது முதல் தடவையாக,
ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.
1973ல் முதல் தடவையாக மத்திய அமைச்சர் ஆனார்.
1982-84ல் முதல் தடவையாக நிதி அமைச்சர்.
அப்போதே இவர் நிதியமைச்சராக இருந்தபோது,
இப்போதைய பிரதமர் ம.மோ.சிங் இவருக்கு  கீழே –
ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியில் இருந்தார் !
( இவர் ஏன் பிரதமரை மதிப்பதில்லை
என்பது இப்போது  சுலபமாகப் புரியுமே !)
இந்திரா காந்தி அகால மரணம் அடைந்தபோது,
பிரதமர் பதவியை இவர் கைப்பற்ற முயற்சி செய்தார் -
விளைவு, ராஜீவ் காந்தியால் கட்சியை விட்டு
வெளியேற்றப்பட்டார்.சமாஜ்வாதி காங்கிரசைத் துவக்கினார்.

இவரை புத்திசாலி என்பதை விட -
சாமர்த்தியசாலி என்று கூறலாம்.
இவரது நிலைத்த முன்னேற்றத்திற்கு காரணமே இவரது
ஒரு வித்தியாசமான, வேறுபட்ட  குணம் தான்.
தனக்கு போட்டியாக இருப்பவரகளை மிரட்டி பணிய வைக்க
முயற்சிப்பார். அவர் பணியவில்லை என்றால் -
சற்றும் தயங்காமல் -
இவர் அவருக்கு பணிந்து போய் விடுவார் !

எனவே, ராஜீவ் காந்தியிடம் சரணாகதியாகி
மீண்டும் முதலில் கட்சியிலும், பிறகு
மந்திரி சபையிலும் இடம் பிடித்தார் !

மீண்டும் ஏறுமுகம்.
திட்டக்குழு துணைத்தலைவர், வெளியுறவுத்துறை
அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கடைசியாக
நிதி அமைச்சர் பதவிகள் !

அடக்கமாக இருப்பது போல் இருந்தாலும், என்றைக்கு
இருந்தாலும் இவர் பார்வை பிரதமர் பதவி மீது தான்.
இவருக்கு கீழ் அதிகாரியாகப்  பணி புரிந்த மன்மோகன் சிங் -
இவரை விட உயரமான இடத்தில் –
பிரதமராக இருப்பது இவருக்கு தீராத எரிச்சல்.

என்றைக்கு இருந்தாலும், ராகுல் காந்தி பிரதமர் ஆவதில்
இவரால் இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்பதால் இவரை
வழியிலிருந்து  அகற்ற, வேண்டா வெறுப்பாக
சோனியா அம்மையார் இவர் பெயரை குடியரசுத்தலவர்
பதவிக்கு பரிந்துரைத்திருக்கிறார் !

இது வரை அவர் பற்றிய வெளிப்படையான
அறிமுகம் பார்த்தீர்கள்.

இனி சொல்லப்போவது அதிகம் வெளியில் தெரியாத
பெருமைகள் -

இந்திரா அம்மையார் எமர்ஜென்சியை கொண்டுவந்தபோது
இவர் அவருக்கு மிகவும் உறுதுணையாக உள்துறை
அமைச்சகத்தில் பணி புரிந்தார். அடக்குமுறையில்
சஞ்ஜய் காந்தியுடன் கைகோத்தார். இவர் மீது பல
புகார்கள் கூறப்பட்டன.

முக்கியமான புகார்களில் ஒன்று அப்போது
இந்திராவை காந்தியை சந்தோஷப்படுத்த,
ஜெய்பூர் மகாராணி காயத்ரி தேவியை
திகார் சிறையில் வைத்து வதைத்தது !

எமர்ஜென்சி அக்கிரமங்கள் பற்றி எழுப்பப்பட்ட சுமார்
46,000 புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான
நீதிபதி ஷா கமிஷனின் இறுதி அறிக்கையில், பதவியை
துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது கடுமையாக குற்றம்
சாட்டப்பட்டு இருந்தது.

ஆனால் விசாரணை அறிக்கை செயல்படுவதற்குள்
மீண்டும் இந்திரா காந்தி அதிகாரத்திற்கு வந்து விட்டதால்
அறிக்கை குப்பைக்கூடைக்கு போய் விட்டது.
ஷா கமிஷனில் இவருக்கு எதிராக சாட்சி கூறிய அதிகாரிகள்
பழிவாங்கப்பட்டனர் - தூக்கி எறியப்பட்டனர்.

2009ல் ஈழத்தில் ராஜபக்சே அரசு லட்சக்கணக்கில்
தமிழர்களை திட்டமிட்டு, கொத்து கொத்தாக 
அழித்துக்கொண்டிருந்தபோது -
இவர் இங்கே வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து
சகல விதத்திலும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவு கொடுத்தார் !

இவர் நிதியமைச்சராக இருந்தபோது தான் -
உள்நாட்டில் விலைவாசி வானளவு உயர்ந்தது !
டாலர் கையிருப்பு  படுபாதாளம் சென்றது !
ரூபாயின் மதிப்பு இதுவரை வரலாற்றில் இல்லாத
அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
பெட்ரோல் விலை 11 முறை உயர்ந்தது.
தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தது.
பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்தது.
பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும்
கோடிக்கணக்கில் சலுகைகள் தரப்பட்டன.
அவர்களுக்கான வரிகள் தளர்த்தப்பட்டன.
சர்வதேச தரமதிப்பு பட்டியலில் இந்தியாவின்
மதிப்பு குறைக்கப்பட்டது.

இன்னும் எத்தனை பொருளாதார மேதைகள்
வந்தாலும் இதை சீர்படுத்த எத்தனையோ
ஆண்டுகள் ஆகும்.

கருப்புப் பணத்தை கண்டெடுக்க உருப்படியாக
எதுவும் செய்யப்படவில்லை.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய
பணத்தை கொண்டு வர தீவிர முயற்சி எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை.
அர்த்தமில்லாத சாக்குபோக்குகள் சொல்லியே
காலத்தைக் கழித்தார்!
ஜெர்மனியிலிருந்தும், ஸ்விஸ் நாட்டிலிருந்தும் கிடைத்த
பெயர்களை, கோர்ட்டில் கூட வெளியிட மறுத்தார்.

நிதியமைச்சராக படுமோசமாகப் பணியாற்றிய ஒருவரை
வீட்டுக்குத் துரத்துவதற்கு பதிலாக, இந்த நாட்டு அரசியல்
பிரமோஷன் கொடுத்து ஜனாதிபதி ஆக்குகிறது !

பல மத்திய அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்
பலத்த விளம்பரம் பெற்றாலும்,
இவர் மீதான சில குற்றச்சாட்டுகள் மட்டும் எப்படியோ
அமுக்கப்பட்டு – விளம்பரம் பெறாமல் பார்த்துக்
கொள்ளப்பட்டன.

அப்படியும் – குடியரசுத் தலவர் பதவிக்கு இவர் பெயர்
பரிந்துரை செய்யப்பட்டவுடன், டீம்  அண்ணா குழுவினர் -
இவர் மீதான, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும்
சில குற்றச்சாட்டுகளை நினைவுறுத்தி, 
அவற்றின் மீது உடனடியாக, சுதந்திரமான விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர்.

அதில் ஒன்று -

ஆப்பிரிக்காவின் “காணா” நாட்டிற்கு உதவி செய்வதற்காக
“ஹராரே” திட்டத்தின் கீழ் அரிசி அனுப்ப வேண்டிய
விவகாரத்தில், இந்திய அரசு உணவுப் பொருள் கார்பொரேஷன்
மூலமாக அரிசி அனுப்புவதற்கு  பதிலாக, தனியார்
முதலாளிகளுக்கு அனுமதி கொடுத்த வகையில்
சுமார் 2,500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும்,
இதில் இந்திய வெளியுறவுத் துறைக்கு (இவர் தான் அப்போது
அமைச்சர் ) பெரிய அளவில் தொடர்பு இருப்பதாகவும்
“காணா” அரசு புகார் கூறி இருந்தது. இது பற்றி
விசாரணை நடத்தக் கோரி காணா அரசு விடுத்த கோரிக்கை -
இதுவரை கண்டு கொள்ளப்படவே இல்லை !

மற்றொன்று  -நேவீ வார் ரூம் லீக் என்று கூறப்பட்ட -
“ஸ்கார்பென்” நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கும் விஷயத்தில்,
இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த
500 கோடி ரூபாய் ஊழல். இது ஜேம்ஸ்பாண்ட் கதைகளை
எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் மர்மக்கதை !

2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படைக்காக
ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க, பிரான்ஸ் நாட்டு
நிறுவனம் “தேல்ஸ்” உடன் செய்து கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்திற்கு இவர் ராணுவ அமைச்சர் என்கிற முறையில்
அனுமதி அளித்திருக்கிறார். இந்த நிறுவனம் லஞ்சம்
கொடுத்து ஆர்டர் பெறுவதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம் !

ஏற்கெனவே மலேசியா, தைவான், தென் ஆப்பிரிக்கா ஆகிய
நாடுகளில் லஞ்சம் கொடுத்த விவரங்கள் வெளியாகி
இருக்கின்றன.
தென் ஆப்பிரிக்க குடியரசின் துணைத்தலவர் ஜாக்கப் ஹூமா,
இந்த நீர்மூழ்கி கப்பல் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியது
நிரூபணமாகி 15 வருட சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.

இந்தியாவிற்கு நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதில்
500 கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருக்கிறது என்று
முன்பு “அவுட்லுக்” பத்திரிகை ஆதாரங்களுடன் தகவல்
வெளியிட்டிருந்தது. அது வெளியிட்டிருந்த ஒரு மின் அஞ்சல்
நீர்மூழ்கிக் கப்பல் நிறுவனத்தின் CEO -
இந்திய தொழிலதிபர் அபிஷேக் வர்மாவுக்கு அனுப்பியது.
அதில் ஸ்கார்பென் ஒப்பந்த விலையில் 4 % தொகையை
தருவதாக நாங்கள் உறுதி செய்கிறோம் என்று
குறிப்பிட்டிருக்கிறது.  6 நீர்மூழ்கிக் கப்பல்களின்
மொத்த விலை சுமார் 19,000 கோடி. இந்திய கடற்படை
நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தம் தங்கள்
நிறுவனத்திற்கே கிடைக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட
முடிவை எடுப்பவர்களுக்காகவும், அதனை ஏற்பாடு
செய்து கொடுப்பவர்களுக்காகவும் இந்த கமிஷன்
தொழிலதிபர் அபிஷேக் வர்மாவிற்கு அளிக்கப்படும் என்று
மின் அஞ்சல் கூறுகிறது.

இது தொடர்பாக, 2007ஆம் ஆண்டு வழக்கறிஞர்
பிரஷாந்த் பூஷன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு
பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். அது இன்னும்
நிலுவையில் கிடக்கிறது.( 5 ஆண்டுகள் தானே ஆகின்றன -
அதற்குள்ளாக விசாரணைக்கு வந்து விடுமா என்ன ?
அதுவும் சம்பந்தப்பட்டவர்  யார் ? அவரது பின்னணி
என்ன ? இவற்றை எல்லாம் யோசிக்க வேண்டாமா ?)

இவர் ஜனாதிபதியாகி விட்டால் -
அரசியல் சட்ட விதிகளின்படி, ஜனாதிபதி பதவியில்
இருக்கும் வரை இவர் மீதான குற்றச்சாட்டுகள் மீது
எந்தவித  மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இப்போதே வயது 77. ஐந்து வருடங்கள் பதவி முடிந்து
மீண்டும் இவர் சாதாரண குடிமகனாக வெளி வரும்போது,
இவர் வயது  82 ஆக இருக்கும். 
அதற்குப் பின்னரா நடவடிக்கை  ?

முதிர்ந்த ஜனநாயக நாடுகளில், பதவியில் உள்ளவர்கள்
மீது ஊழல் புகார் வந்தால் -  சுதந்திரமான
முறையில் விசாரணை நடைபெறுவதற்காக,
விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை அவர்கள்
தங்கள் பதவியை விட்டு விலகி நிற்பார்கள்.

நம் நாட்டில் யார் மீதாவது ஊழல் புகார்கள் இருந்தால் -
அதிலிருந்து அவர்கள் தப்பிக்க இந்திய அரசியலில்
ஒரு புது வழி உண்டாக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்று அவர்களை கவர்னர்  ஆவது – அல்லது
ஜனாதிபதி ஆவது !

இனி இவர் ஜனாதிபதி ஆவதை யாரும் தடுக்க முடியாது.
இவர் ஜனாதிபதி ஆகி விட்ட பிறகு நான் இதையெல்லாம்
எழுதினால் – நாட்டின் முதல் குடிமகனை அவமதிப்பது
போல் ஆகி விடும் அல்லவா ?  அதற்காகத்தான்
அவசரமாக இப்போதே, அவர் சாதாரண குடிமகனாக
இருக்கும்போதே  எழுதுகிறேன்.

என்ன இருந்தாலும்  பதவிக்கு மதிப்பு
கொடுக்க வேண்டும் அல்லவா  ???  !!!