ADS
AD
Monday, July 2, 2012
வரப்போகும் ஜனாதிபதியின் ” யோக்கியதாம்சங்கள் “…..
Friday, November 11, 2011
நலம் தரும் விரல் முத்திரைகள்
இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.
ஞான முத்திரை

கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.
வருண முத்திரை

பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கிறார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது என்கிறார்கள்.
சூன்ய முத்திரை
கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும் போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.
இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
ப்ராண முத்திரை

கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.
இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்தமான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும் கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.
அபான முத்திரை

கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது.
இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.
அபான வாயு முத்திரை

அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியை பெருவிரலின் ஆரம்ப பாகத்தில் வைத்தால் அபான வாயு முத்திரை உண்டாகிறது. அதாவது நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல்களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொட்டு, ஆட்காட்டி விரலை மடித்து பெருவிரலின் நுனி பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது
இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.
லிங்க முத்திரை

படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டிய நிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக் கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.
சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.
இனி இந்த முத்திரைகளைச் செய்யும் போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.
முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.
பின் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள்.
இந்த முத்திரைகளை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், படுத்த நிலையிலும், நடந்து கொண்டும் கூட செய்யலாம். ஆனால் பரபரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக இருப்பது மிக முக்கியம்.
இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவையான முத்திரைகளைச் செய்யலாம் என்கிறார்கள். சிலர் பத்து அல்லது பதினைந்து நிமிட காலங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.
ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரிசோதித்துக் கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை. எனவே செலவோ, பிரயாசையோ இல்லாத இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா:
Monday, November 7, 2011
அணு விஞ்ஞானி அப்துல் கலாம்!

அப்துல் கலாம் கூடங்குளம் சென்று வந்துள்ளார். அங்குள்ள அணு மின் உலை அபாயமற்றது; வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லியுள்ளார். இது கிட்டத்தட்ட எதிர்பார்த்ததுதான். அப்துல் கலாம் அணு மின்சாரத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். (நானும்தான்.) எனவே அவர் மாற்றாக எதையும் சொல்லியிருக்கப்போவதில்லை.
ஆனால் பிரச்னை, அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியா என்பதைப் பற்றியது. அவர் அணு விஞ்ஞானி அல்லர். அப்படி அவர் தன்னை ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. அவர் ஒரு ஏரோனாட்டிகல் பொறியாளர். ஒரு கட்டத்தில் இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார். அது மட்டுமே அவரை அணு விஞ்ஞானி ஆக்கிவிடாது. எனவே ஊடகங்கள் அவரை அணு விஞ்ஞானி என்று அழைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
அப்படியானால், அப்துல் கலாமால் அணு சக்தி பற்றிய விஷயங்களையும் அது தொடர்பான அபாயங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்றா சொல்வது? இல்லை! நல்ல அறிவியல் புரிதல் கொண்ட எவராலுமே அணு சக்தி, அதன் ஆற்றல், அதன் அபாயங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் போன்ற பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவருக்குக் கட்டாயம் இதுபற்றி நல்ல புரிதல் இருந்தாகவேண்டும்.
அந்த மட்டத்தில், அவரை அணு விஞ்ஞானி என்று அழைக்காமல் போகலாமே தவிர, கூடங்குளத்தில் பிறர் சொல்வதுபோல ஆபத்து என்பதெல்லாம் இல்லை என்று அவர் சான்றிதழ் கொடுத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.
கலாம் அல்லர் அரசியல்வாதி. அவர் குஜராத் கலவரம் பற்றி என்ன சொன்னார், இலங்கைப் படுகொலை பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் கேட்பவர்கள்தான் அரசியல்வாதிகள்! அறிவியல், தொழில்நுட்பம் மூலம் உலகை நல்லபடியாக மாற்றமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் கலாம், அது தொடர்பான விவாதங்களில்தான் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது வெளிப்படை. பிற விஷயங்களில் கருத்து சொல்ல அவர் தயங்குகிறார். எனவே, அதில் அவர் கருத்து என்ன, இதில் அவர் கருத்து என்ன என்று தோண்டிப் பார்க்காமல், அணு சக்தி தொடர்பாக அவர் நியாயமான கருத்தை முன்வைக்கக்கூடியவரா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்.
அவரை நம்பாதவர்கள், அவரை அரசவைக் கோமாளி என்று சாடுபவர்கள் சாடிவிட்டுப் போங்கள்.
Friday, November 4, 2011
Thursday, November 3, 2011
Tuesday, December 28, 2010
வருக 2011
மின்னும் வெண்திரைகள் மதி கெடுக்கும் நிகழ்ச்சிகட்கு முடிவுகட்டி முடங்க வைக்கும் முற்போக்கு காலம் வரும்
தவறிழைத்து பொருள் சேர்த்த நீதிமன்னர் தடம் மாறிப்போனதாலே அவர்தம் தறி கெட்டு போகின்ற காலம் வரும்
படித்தவர்கள் சூதாடும் பணச்சந்தை பலமிழந்து அவர்தாம் பண்போடு பொருளீட்டும் காலம் வரும்
பள்ளிகளே பணம் சேர்க்கும் வணிக நிலை மாறி நல்லதொரு தலைமுறையை நமக்கீனும் காலம் வரும்
வெளிநாட்டு வேலை என்னும் விபரீத மாயை நீங்கி நம்நாட்டின் சேவையே நலமென்னும் காலம் வரும்
காவலரே கொள்ளையராய் ஆன நிலை நீங்கி காவலே தேவையில்லை எனும் பொற்காலம் வரும்
ஊடகங்கள் உண்மைகளை உரைக்கா நிலை மாறி நடுவுநிலை தவறாமல் நவிலும் நற்காலம் வரும்
வீடுகளாய் ஆகிவிட்டு எஞ்சிநின்ற விளைநிலங்கள் விஞ்சுகின்ற விளைச்சல் தரும் காலம் வரும்
மாடுகள் உண்ணுகின்ற புல்களுக்கே கழிவுநீர் பயனாகி மாசில்லா நீர்த்தேக்கம் நாடெங்கும் பெருகி வரும்
இலவசங்கள் என்னும் பிச்சைகள் இல்லாமல் ஒழிந்து, இருளான பாரதம் பகலாக மாறிட தடையின்றி மின்சாரம் தவழ்கின்ற காலம் வரும்
மதுவிலக்கு நாடெல்லாம் சட்டமாகி மனை மக்கள் மாட்சி பெரும் காலம் வரும்
தலைமுறைக்கு பொருள் சேர்த்து தனயனையே அரியணைக்கு அமர்த்தும் இக்காலம் மாறும்
விலைகொடுத்து வாங்குகின்ற வாக்கு வெற்றி அரசியல் வீணாகும் காலம் வரும்
நல்லதொரு பாரதத்தை உருவாக்க எமக்கெல்லாம் அருள்புரிவாய் எம்பெருமானே
நல்லதொரு தலைவன் வேண்டும் வருமாண்டில் எமக்கருள்வாய் முருகப்பெருமானே"
Wednesday, January 27, 2010
நான் எதற்காக உழைக்க வேண்டும்!!!
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார் என்னைப்பார்.
1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
உயர்சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் கேட்டார் நான் யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக் குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்.
பொழுது போக்க வண்னத்தொலைக்காட்சி பெட்டி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்..
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம்,
பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம்
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்.
மகள் பிள்ளை பெற்றால் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்...
நான் எதற்காக உழைக்க வேண்டும்!!!
வியந்து போனேன் நான்!!!
என் உயிர்த்தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு...
ஒன்று லஞ்சம் மற்றொன்று பிச்சை!!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய்..
இலவசம் நின்று போனால் உன் நிலை!!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் ,
மாறும் நிலை இன்னும் வெகு தொலைவில் இல்லை..
தமிழா விழித்தெழு..
உழைத்திடு..
இலவசத்தை வெறுத்திடு..
அழித்திடு..
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு!!!
நாளைய தமிழகம் நம் கையில்..
உடன் பிறப்பே சிந்திப்பாயா!!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி
இதை இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் பதிவிட்டவர்... சச்சிதானந்தன் முருகேசன் அவருக்கு நன்றிகள்...
Saturday, December 26, 2009
தாய்(பறவை) பசித்திருக்கும் தனிமை
உண்ணுகின்ற வட்டிலிலே ஓட்டையிடச் சொல்லுகின்ற
உத்தியே உயர்ந்ததென்னும் தலைமை வேண்டாம்;
உடனிருந்து பணியாற்றும் அதிகாரியைக் கொன்று
தன் குடும்பம் உயர்த்துகின்ற மடமை வேண்டாம்;
மின்னுகின்ற தாரகையைத் தினமெண்ணும் திருத்தொண்டே
அரசாங்கப் பணியென்னும் அவலம் வேண்டாம்;
கண்ணெதிரே நடக்கின்ற கயமைகளைக் கண்டபின்னும்
கைகட்டி வாய்பொத்தும் அச்சம் வேண்டாம்;
எண்ணுகின்ற எண்ணமும் எழுதிப்படிப்பதுவும்
பணம் பண்ணத்தான் என்னும் கல்வி வேண்டாம்;
எதிரிலே இருப்பவனை ஏமாற்றிப்பொருள் சேர்க்கும்
ஏய்ப்புக்குத் துதிபாடும் சந்தை வேண்டாம்;
ஒரு கூட்டுப்பறவைகள் பல நாட்டில் இரைதேட
தாய்ப்பறவை பசித்திருக்கும் தனிமை வேண்டாம்;
பலநாட்டுப் பண்பாட்டைப் போற்றியே மதித்தாலும்
நம் பண்பைச் சீரழிக்கும் துணிவு வேண்டாம்;
ஏறுகிற எல்லாமும் இறங்குமெனும் சித்தாந்தம்
இறைவனது ஆட்டமெனும் உணர்வு வேண்டும்;
ஒருகதவு மூடிவிட்டால் மறுகதவு திறக்குமெனும்
ஓயாத நம்பிக்கை இருக்க வேண்டும்;
மாறுகிற பழமையுடன் சேருகிற புதுமைகளை
வடிகட்டித் தேர்ந்தெடுத்துத் தழுவ வேண்டும்;
தானுயரும் வேளையிலே தனைச்சார்ந்த அனைவரையும்
தோளேற்றிச் சுமக்கின்ற மனது வேண்டும்;
பாரதியும் கம்பனும் வள்ளுவனும் உரிமையுடன்
தமிழ் சொல்லிக் கேட்கின்ற கல்வி வேண்டும்;
பாரதிரப்பல தொழிலின் சிகரத்தை தொடுமளவு
நுண்ணறிவுத் திறம்படைத்த இளமை வேண்டும்;
வானுயரக் கொடிபறக்க பாரெங்கள் தேசமென்று
ஒருசேரக் குரல் கொடுக்கும் மாண்பு வேண்டும்;
வருகின்ற புத்தாண்டில் வடிக்கின்ற பொங்கலிலே
வள்ளி மணவாளவன் கருணை வேண்டும்;
இனிய கவிதை ஆக்கியவர்: திரு. இயக்கோகா சுப்பிரமணியம் அவர்கள்
Tuesday, October 27, 2009
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.
பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.
ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.
இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுழையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.
டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி
என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்
அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!
தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி
ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை
அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
நான்
பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!
இன்று நான்
இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நான்
சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!
ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்
அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்
அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை
தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி
செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
......................
.....................
...................நன்றி.


